150 பேர் பணிபுரிவர்; பொது மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும்
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் முதியோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பல வசதிகளுடன் எஃப்1 பிட் கட்டடத்தில் சிகிச்சை நிலையம் தயாராகிவிட்டது. அது நவம்பர் 9ஆம் தேதி முதல் செயல்படும்.
முதியோரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த நிலையத்தில், சாப்பாடு முதல் கலந்துறவாடுவதற்கான வசதிகள்வரை பலவும் பாதுகாப்பான முறையில் உயர்தரமிக்கவையாக இருக்கும்.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள நோயாளிகள் தொலைக்காட்சி பார்த்து மகிழ, எளிமையான உடற்பயிற்சிகளில், விளையாட்டுகளில் ஈடுபட வசதியும் இருக்கும்.
புதிய சிகிச்சை நிலையத்தில் 721 நோயாளிகளுக்கு இடம் இருக்கிறது. முற்றிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ள, கொவிட்-19 கிருமி தொற்றிய முதியவர்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
தொற்று இருக்கும் போதிலும் சாப்பிடுவது, கழிவறைக்குச் சென்று வருவது போன்ற காரியங்களைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலையில் இருப்போருக்கு அந்தப் புதிய நிலையம் உரியதாக இருக்கும்.
தடுப்பூசி போட்டவர்கள் என்றால் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடாதவர்கள் என்றால் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அங்கு இடமுண்டு.
அந்தப் புதிய நிலையம் பொது மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க உதவும்.
அதில் யாரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைச் சுகாதார அமைச்சின் கொவிட்-19 கிருமி தொற்றியோரை நிர்வகிக்கும் சிறப்புப் பணிக்குழு முடிவு செய்யும்.
புதிய நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பராமரிப்புத் தூதர்கள் நோயாளிகளுக்கு உணர்வுபூர்வ ஆதரவை வழங்குவார்கள்.
ஒவ்வொரு வார்டிலும் எந்தவொரு நேரத்திலும் 17 மருந்தக ஊழியர்கள் இருப்பார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள், பராமரிப்பு, பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட குறைந்தபட்சம் 150 பேர் அங்கு பணியாற்றுவார்கள்.
தேவை எனில் நோயாளிகளைப் பக்கத்தில் உள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக மருத்துவ வாகனச் சேவையும் இருக்கும். மருத்துவ ஊழியர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.