கொவிட்-19 சூழலால் வெளியே செல்ல முடியாமல் தங்களுடைய தங்குவிடுதிகளிலேயே ஓராண்டுக்கு மேலாக அடைப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவரவேண்டும் எனும் நோக்கில் 100 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கியது ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளை.
'அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி' என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப, 'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்' என்று அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர் நம் முன்னோர்.
'சை ஜூ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றும் நூறு ஊழியர்களுக்கு அவர்கள் பணி புரியும் மரினா சவுத் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்திலேயே மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் சைவ பிரியாணி, இனிப்புப் பலகாரங்கள் வழங்கப்பட்டன.
தம் சொந்தங்களை விட்டுப் பிரிந்து, கடந்த ஒன்றரை வருட காலமாக இவ்வுலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோயின் தாக்கத்தால் வெளியேகூடச் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, தீபாவளி திருநாளையொட்டி, ஒரு வேளை உணவு மற்றும் இந்திய இனிப்புப் பலகாரங்களை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார் ஞானானந்தம் மிஷன் அமைப்பின் நிர்வாக இயக்குனரான பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி சுவாமிகள்.
"மக்களின் முகத்தில் குறிப்பாக நலிந்தோரின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருவதே எங்கள் அமைப்பின் முக்கிய இலக்கு.
"இந்த விழாக் காலத்தில் குறிப்பாக தங்களது குடும்பங்களையும் அன்புக்குரியவர்களையும் விட்டுப் பிரிந்து இருக்கும் 100 வெளிநாட்டு நண்பர்களின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வர வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் மேலும் பல நிகழ்வு கள் மூலம் இன்னும் பலருடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள விழைகிறோம்,'' என்று மின்னியல் பொறியியல் நிபுணராகப் பணிபுரியும் ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளையின் உள்ளூர் நிர்வாக இயக்குநரும் மின் பொறியியல் நிபுணருமான டாக்டர் கஜன், 41, கூறினார். வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்துடன் (MWC) இணைந்து ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளை இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இதற்குப் பல நண்பர்களும் உதவி செய்தனர்.