நியூயார்க்: குடும்பங்களைப் பிரித்து, சுற்றுலாவை முடக்கி, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த எல்லை கட்டுப்பாடு அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது.
மகிழ்ச்சியடைந்த பயணிகள், உறவுகளைக் காணமுடிந்த, நிம்மதி பெருமூச்சுவிட்ட உறவினர்கள் என உணர்ச்சிமிக்க காட்சிகளை அமெரிக்க விமானநிலையங்களிலும் இதர எல்லை நுழைவாயில்களிலும் பார்க்கமுடிந்தது.
அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள ரெயின்போ பாலம் முதல் கலிஃபோர்னியாவின் சான் சிட்ரோவில் உள்ள மெக்சிகோவின் டிஜுவானா கடப்பு வரை உறவினர்கள், நட்புகளைக் காண்பதற்காக மக்கள் அணி வகுத்து நின்றனர்.
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஐரோப்பிய விமானத்திலிருந்து பயணிகள், ஆரவாரத்துடனும் கைதட்டலுடனும் முனையத்திற்குள் நுழைந்தனர்.
"முதன்முறையாகச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்தேன். கிருமிப் பரவல் காரணமாக அதிக கிட்டத்தட்ட 28 முறை மறுபதிவு செய்திருக்கிறேன். அதிக பணம் செலவானது. ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று இரண்டு ஆண்டுகள் கழித்து தன் மகனைக் காண்பதற்காக ஹூஸ்டன் செல்ல ஜெர்மனி விமான
நிலையத்தில் காத்திருந்த ஹன்ஸ் வுல்ஃப் என்பவர் சொன்னார்.
இத்தருணத்தைக் கொண்டாடும் வகையில் லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தில் இருந்து நியூயார்க்கிற்கு இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டன.
தேவை அதிகரித்துள்ளதையடுத்து, விமான நிறுவனங்கள் அதிக விமானங்களை இயக்கவும் பெரிய விமானங்களைப் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றன.
கட்டுப்பாடுகளால் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பல நகரங்கள் பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. ஆனால் எல்லை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சில நாணய மாற்று மையங்கள் டாலர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன.
சென்ற திங்கட்கிழமை முதல், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குடும்ப சந்திப்பு அல்லது சுற்றுலா உட்பட அத்தியாவசியமற்ற அமெரிக்க பயணத்தைத் தனிமைப்படுத்தல் இல்லாமல் மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியிருந்தது.
அதேசமயம் அமெரிக்காவிற்கு அத்தியாவசிய பயணம் மேற்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் அனுமதிக்கப்
படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.