பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நில எல்லைகள் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்-ஜோகூர் இடையே பயணம் செய்வோர்க்கான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) குறித்த விவரங்கள் விரைவில் இறுதிசெய்யப்பட்டுவிடும் என்று நம்புவதாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
“இருநாடுகளையும் சேர்ந்த ஏராளமான ஊழியர்கள், பல மாதங்களாகத் தங்களது குடும்பங்களைக் காண முடியாமல் தவிக்கின்றனர். எல்லைகளை மீண்டும் திறக்கும்போது, தங்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைய ஏதுவாக அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
ஆயினும், நிலவழி ‘விடிஎல்’ திட்டம் தொடங்கும் நாள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான நில எல்லை இம்மாதம் 29ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று மலேசியாவின் ‘தி ஸ்டார்’ ஊடகத்தில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சு இவ்வாறு விளக்கமளித்தது.
ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது அவ்வாறு தெரிவித்ததாக அச்செய்தி குறிப்பிட்டது.
இருப்பினும், சிங்கப்பூரில் அல்லது ஜோகூரில் வேலை செய்வோர் போன்ற நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரை மட்டுமே அந்த நிலவழி ‘விடிஎல்’ திட்டம் உள்ளடக்கும் என்றும் திரு ஹஸ்னி சொன்னதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 பரவலுக்குமுன், கடற்பாலம், துவாஸ் இரண்டாவது பாலம் வழியாக நாள்தோறும் ஏறத்தாழ 415,000 பயணம் செய்தனர்.