சென்னை: அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் விதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக 500 'கலைஞர் உணவகங்கள்' தொடங்கப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 700 அம்மா உணவகங்களில் மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், பேரிடர் காலங்களில் இலவசமாகவும் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அம்மா உண வகத்துடன் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்களும் வருங்காலத்தில் அமைக்கப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் பேசியிருந்தார்.
தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அம்மா உணவகம்' என்று நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு 'கலைஞர் உணவகம்' என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காலப்போக்கில், அம்மா உணவகங்களைக் கலைஞர் உணவகங்களாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது," என்று கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், "கலைஞர் உணவகங்கள் கொண்டு வருவதை வரவேற்கிறோம். ஆனால், அம்மா உணவகங்களை முழுமையாக மூடி மறைத்துவிடாமல் கலைஞர் உணவகங்கள் செயல்படவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சேலம், நவப்பட்டி ஊராட்சியில் 'அம்மா மினி கிளினிக்' என்ற பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நீக்கப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன் 'முதலமைச்சர் கிளினிக்' என திமுகவினர் பெயர் பலகை வைத்துள்ளது அங்குள்ள அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.