அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு 50 மில்லியனைத் தாண்டியது
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டிவிட்டதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புதுவகை ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், உருமாறிய டெல்டா கிருமி அமெரிக்காவைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக அன்றாட கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இதற்கு டெல்டா கிருமியே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, வெர்மான்ட், நியூ ஹேம்ப்ஷியர், மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா பரவல் அதிகமாக இருக்கிறது.
அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 20 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், அங்கு கொவிட்-19 தொற்று இறப்பு எண்ணிக்கை 4.6% கூடிவிட்டது. இதுவரை அங்கு கொரோனா தொற்றியோரில் 800,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
ஏறக்குறைய பாதி அமெரிக்க மாநிலங்களில் ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுவிட்டது. ஆனாலும், புதிய பாதிப்புகளில் 99 விழுக்காட்டிற்கு டெல்டா கிருமியே காரணமாக உள்ளது என்று நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் ரோஷல் வெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 25 மில்லியனை எட்ட கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் தேவைப்பட்டது என்றும் ஆனால், அடுத்த 323 நாள்களில் அவ்வெண்ணிக்கை 25 மில்லியனில் இருந்து 50 மில்லியனைத் தொட்டுவிட்டது எனும் ராய்ட்டர்ஸ் தரவுப் பகுப்பாய்வு கூறுகிறது.