காத்திருந்தே சாகும் கொவிட்-19 நோயாளிகள்!
சோல்: கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் காட்டிய அவசரம், கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் எதிர்பாரா அளவிற்கு உயர்த்திவிட்டது.
கிருமித்தொற்றில் இருந்து வெகுவாக மீண்ட தென்கொரியாவில்தான் இப்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடந்த வாரம் சராசரியாக நாளொன்றுக்கு 6,320 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 80 பேரின் உயிரை அந்நோய்த்தொற்று பறித்துவிட்டது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறை இக்கட்டான நிலைக்குச் சென்றுவிட்டது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பிவிட்டன.
ஆக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள தலைநகர் சோலில், கடுமையான கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு 34 படுக்கைகளே காலியாக உள்ளன.
சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, சோலிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் 1,739 நோயாளிகள் படுக்கைகளுக்காகக் காத்திருந்தனர்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லாததால் கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் 29 பேர் வீட்டிலேயே இறந்துவிட்டதாக அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்காகக் கூடுதல் படுக்கைகளை ஒதுக்கும்படி சென்ற மாதத்தில் மட்டும் தென்கொரிய அரசு நான்கு ஆணைகளைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூடுதலாக 134 படுக்கைகள் ஒதுக்கப்பட்டன.
கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் முன்கள சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
“மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய நோயாளிகள் வீடுகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்க வேண்டியவர்கள் மற்ற பிரிவுகளில் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்,” என்று மனிதநேய மருத்துவர்கள் சங்கமும் மேலும் நான்கு மருத்துவ, நல்வாழ்வுச் சங்கங்களும் ஒரு கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளன.