பிள்ளைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு உதவு வதற்கும் தேவையான சில பயனுள்ள ஆலோசனைகளைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி தலைசிறந்த அடித்தளக் கல்வி ஆசிரியர் விருதுகள் விழாவில் பாலர் கல்விப் பிரிவில் விருது பெற்ற ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மிகவும் முக்கியம் என்று பிரேடல் ஹைட்ஸ் புளோக் 246ல் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் 33 வயது திருவாட்டி ஏ. நிஷாந்தினி நீலமோகன் வலியுறுத்தினார்.
"பெற்றோர் பலர் வேலையில் மூழ்கியிருப்பதால் தங்கள் பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவழிப்பதில்லை. வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருந்தால் ஒருநாளுக்குக் குறைந்தது பத்து நிமிடங்களுக்காவது உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழியுங்கள். அவர்களை நீங்கள் பள்ளிக்கு அனுப்பலாம் அல்லது பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். இவை சிறு முயற்சிகளாகத் தோன்றினாலும் இவற்றின் வழி உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இவை வழி
வகுக்கும்," என்றார் நிஷாந்தினி.
பிள்ளைகள் அடம்பிடித்து திடீரெனத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் அதற்குக் காரணம் இருக்கும் என்றார் நிஷாந்தினி.
அதற்கான காரணத்தைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர். 'அழாதே' அல்லது 'ஆண் பிள்ளைகள் அழக்கூடாது' போன்ற வார்த்தைகள் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்றார் நிஷாந்தினி.
அதற்குப் பதிலாக 'உனக்கு என்ன தேவைப்படுகிறது?' அல்லது 'நான் உனக்கு எவ்வாறு உதவ முடியும்?' போன்ற வார்த்தைகள் பெரிதளவில் உதவும் என்றார் நிஷாந்தினி.
பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்த பெற்றோர் தயங்கக்கூடாது என்று விருது பெற்ற மற்றோர் ஆசிரியரான 47 வயது திருவாட்டி சுலோச்சனா கணபதி தெரிவித்தார். இவர் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்.
பிள்ளைகளிடம் பாசமாக இருந்தால் அது அவர்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வித்திடும் என்று திருவாட்டி சுலோச்சனா உறுதியாக நம்புகிறார்.
உதாரணத்துக்கு, குறிப்பிட்ட ஒரு விவகாரம் குறித்து தங்கள் பிள்ளை பாதிக்கப்பட்டிருந்தால் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் முழுக் கவனம் செலுத்தலாம். இது அப்பிள்ளைக்கு உணர்வு ரீதியாக உதவும் என்றார் சுலோச்சனா. அந்தப் பிள்ளைக்கு ஆறுதல் தரும் வகையில் அவரது முதுகைத் தட்டிக் கொடுக்கலாம் என்றார் அவர்.
"பிள்ளைகள் தங்கள் பெற்றோர் கூறும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனித்து, கற்றுக்கொள்கின்றனர். 'இன்று பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாய்'? என்று கேட்பதற்குப் பதிலாக 'பள்ளியில் மகிழ்ச்சி யாக இருந்தாயா?' என்று பெற்றோர் கேட்கலாம்," என்று திருவாட்டி சுலோச்சனா ஆலோசனை வழங்கினார்.