ஒமிக்ரான் பரவலால் சரிந்த விமான டிக்கெட் விற்பனை
விமானப்பயண டிக்கெட் விற்பனை சென்ற ஆண்டு இறுதியில் வெகுவாகக் குறைந்தது என்று அனைத்துலக விமான போக்குவரவு அமைப்பு (ஐ.எ.டி.எ) தெரிவித்திருக்கிறது.
ஒமிக்ரான் தொற்றுப் பரவலால் உலகநாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் மூடியது அதற்குக் காரணம் என அமைப்பு கூறியது.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒமிக்ரான் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக விமானப் பயணங்கள் மீண்டும் குறையத் தொடங்கின.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த நவம்பரில் விமான டிக்கெட்டுகளின் விற்பனை, 60.5 விழுக்காடு குறைந்திருந்தது.
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொவிட்-19 பரவல் காரணமாக தங்கள் எல்லைகளை மூடிய நாடுகள், 2021ஆம் ஆண்டில்தான் மீண்டும் விமானப் பயணங்களைத் தொடங்கின.
அதனை அடுத்து, விமானப் பயணங்கள் சென்ற ஆண்டு நடுப்பகுதியில் மீட்சி காணத் தொடங்கின.
இந்நிலையில், ஒமிக்ரான் கிருமி காரணமாக அரசாங்கங்கள் மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. அதனால் இவ்வாண்டின் முதல் சில மாதங்களில் விமானப் பயணங்கள் சரியும் என அமைப்பின் தலைவர் கூறினார்.
விமான நிறுவனங்கள் இவ்வாண்டு சுமார் 11.6 பில்லியன் டாலரை இழக்கக்கூடும் என ஐ.எ.டி.எ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.