குணச்சித்திர நடிகர் ஜி.எம்.சுந்தரை திரையில் பலமுறை பார்த்திருப்போம். ஆனால், அவ்வப்போது திரையுலகில் இருந்து காணாமல் போய்விடுவார்.
கே. பாலசந்தரின் 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுந்தர். அவரது திரைப்பயணம் நீளமானது. ஆனால் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு தன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்துவிட்டது என்கிறார் சுந்தர். கொரோனா காலகட்டத்தில் 'சார்பட்டா பரம்பரை', 'மண்டேலா', 'ரைட்டர்' ஆகிய படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்பட்டவை. தமிழ், மலையாளப் படங்கள் என பரபரப்பாக வலம்வருகிறார் சுந்தர்.
'புன்னகை மன்னன்', 'சத்யா', `கடமை கண்ணியம் கட்டுப்பாடு', `புலன் விசாரணை' என்று தேர்ந்தெடுத்த சில கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளேன். எனினும், பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அதனால் சொந்தத் தொழிலை கவனிக்கப் போய்விட்டேன்.
"மனம் முழுவதும் திரைப்படங்கள் பக்கமே இருந்தது. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடித்து வந்தேன். 'சூது கவ்வும்' படம் வெளியானபோது, இயக்குநர் மதன் குமாரசாமியிடம் நானே வலியச் சென்று வாய்ப்பு கேட்டு நடித்த படம்தான் 'காதலும் கடந்து போகும்'. அதன்பிறகு திரையுலகில் இரண்டாவது சுற்றைத் தொடங்கி உள்ளேன். 2021ஆம் ஆண்டு பல பேருக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால், ஒரு நடிகனாக எனக்கு அது அற்புதமான ஆண்டு.
"நான் நடித்த 'மகாமுனி' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வினோத் 'வலிமை' படத்தில் நடிக்க அழைத்தார்.
"படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த போது 'உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி' என்றேன். பதிலுக்கு, அவர் 'எனக்கும் உங்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி' என்றார். ஆச்சரியமாக இருந்தது.
"'நான் அப்படி ஒன்றும் பெரிய நடிகன் இல்லையே சார்' என்று சொன்னதும், 'அப்படிச் சொல்லாதீர்கள். உங்களுக்கு எப்படி ஓர் இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாரோ, அதே மாதிரிதான் நானும் இங்கு வந்துள்ளேன்' என்றார். அவரது பணிவு வியக்க வைத்தது," என்கிறார் சுந்தர்.