உயர் தொழில்நுட்பம் கொண்ட மிகச் சிறிய குறுஞ்செயற்கைக் கோள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது. 100 கிலோகிராம் எடையில் சிறிய குளிர்பதனப் பெட்டியின் அளவில் அமையவிருக்கும் அது, பூமிக்கு வெகு அருகே விண்ணில் வலம் வரும்.
செயற்கைக் கோள்களைத் தாழ்வாகப் பறக்க விடும் புதிய தொழில்நுட்பங்களைச் சோதிப்பதே இத்திட்டத்தின் இலக்கு.
வழக்கமான செயற்கைக் கோள்கள் 500 முதல் 800 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரக்கூடியவை. இந்தக் குறுஞ்செயற்கைக் கோள் பூமியிலிருந்து 250 கிலோமீட்டர் உயரத்தில் வலம் வரும்.
பூமியைக் கண்காணிக்கும் கருவிகள் மேலும் திறம்படச் செயல்பட, இப்புதிய தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் (என்டியு) தலைமையிலான புதிய கூட்டமைப்பு, சிங்கப்பூரின் குறுஞ்செயற்கைக் கோளை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டில் அது விண்ணில் செலுத்தப்படும்.
புதிய கூட்டமைப்பில் இடம்பெறும் அமைப்புகள் அதன் தொடர்பிலான ஆய்வு ஒத்துழைப்பு உடன்பாட்டில் நேற்றுக் கையெழுத்திட்டன. ஷெரட்டன் டவர்சில் நடைபெற்ற இரண்டு நாள் அனைத்துலக விண்வெளி, தொழில்நுட்ப மாநாட்டிற்கிடையே அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.
சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் விண்வெளிக் கேமரா, குறுஞ்செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும். அது 50 செமீ நீளம் மட்டுமே கொண்ட சிறிய பொருள்களையும் மிகத் தெளிவாகப் படமெடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் குறுஞ்செயற்கைக் கோள், பயன்பாட்டிற்குப் பிறகு விண்வெளிக் குப்பையாக விண்ணை மாசுபடுத்தாது. பயன்பாடு முடிந்ததும் அதன் இயந்திரம் அணைக்கப்படும். சில நாள்களில் அது பூமியின் காற்று மண்டலத்தை அடையும் வேளையில் தானாகவே எரிந்துவிடும்படி வடிவமைப்படும் என்பது சிறப்பம்சம்.
என்டியு 2011ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது விண்கலன்களைக் கட்டமைத்து விண்ணில் செலுத்தி இருக்கிறது.