கவின்விழி கதிரொளி
சிறுவயதிலிருந்து விளக்கங்களையும் வர்ணனைகளையும் கேட்டு ரசித்துவந்துள்ள 41 வயது மூன்றாம் இராணுவ வல்லுநர் விஜயன் பிரகாஷ், முதன்முறையாக வர்ணனையாளராகப் பரிணமிப்பதில் பேரார்வம் கொண்டுள்ளார்.
இன்று தொடங்கும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் வர்ணனையாளர்களில் ஒருவரான இவர், தமது பங்கை ஆற்றுவதில் பேரார்வத்துடனும் பெருமிதத்துடனும் உள்ளார்.
சிங்கப்பூர் விமானக் கண் காட்சியில் இடம்பெறும் 'AH-64D' ரக வானூர்தி வான்வழி காட்சி அணியின் வர்ணனையாளராக முதல் முறை பொறுப்பேற்று இருக்கிறார் விஜயன்.
விமானப்படை பொறியாளரான இவருக்கு, சிறு வயதிலிருந்தே விமான சாகசக் காட்சிகளில் ஆர்வம் அதிகம். குறிப்பாக இவருக்கு விளக்கவுரையை கேட்பது மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு வர்ணனையாளராக இருக்க வாய்ப்பு கிட்டியதும் திரு விஜயன் அதை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.
"விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கும்போது எங்களுக்குத் திருப்தியாக இருக்கும். இவ்வாண்டு அதே விமானங்கள் சாகசக் காட்சிகள் புரிவதைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்லாமல், அதற்கு வர்ணனையாளராக செயல்பட போவது பெரும் நிறைவை அளிக்கின்றது" என்றார் திரு விஜயன்.
2022 விமானக் கண்காட்சிக்காக சென்ற ஆண்டு டிசம்பரிலிருந்து கடும் பயிற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"அர்ப்பணிப்பும், செய்யும் செயலில் சிறந்து விளங்குவதும் சிங்கப்பூர் ஆகாயப்படையின் சிறப்பு அம்சமாகும். இதில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்" என்று திரு விஜயன் கூறினார்.
அவரைப் போன்று விமானக் கண்காட்சியில் பங்குபெறுவதை வரமாக எண்ணுகிறார் 20 வயது மூன்றாம் சார்ஜண்ட் கவீன் சான்ஷ்ரே.
'F-16C/D' ஃபால்கன் போர்த்தொடருக்கான விமானப்படை தொழில்நுட்ப வல்லுநராக, தனது முதல் விமான சாகசக் காட்சியில் காலெடுத்து வைக்கிறார் கவீன். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் ஆகாயப்படையில் அவர் சேர்ந்த பிறகு இதுவே அவர் பங்குபெறும் முதல் மாபெரும் நிகழ்வாகும்.
விமானம் செயல்பாட்டுக்குத் தயாராக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது இவரது முதன்மையான பணியாகும்.
தமது பெற்றோரின் பரிந்துரைபடி வேலை-படிப்பு பட்டயம் திட்டத்திற்கான முன்னோடித் தொகுப்பில் ஒரு மாணவனாக இருப்பதில் கவீன் பெருமிதம் கொள்கிறார். அந்தத் திட்டத்தில் அவர் விமானப் பராமரிப்பு பொறியியல் படித்து வருகிறார்.
"பொறியியல் மீது மிகுந்த நாட்டம் எனக்கு. அதனால் தகவல் தொழில்நுட்பம் படித்து முடித்தவுடன் நான் பொறியியல் படிப்புக்கு மாறினேன்" என்றார் திரு கவீன்.
திரு கவீன் தனது தந்தை மற்றும் உறவினர்கள் வாகனங்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்து வளர்ந்தார். இது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என அவர் தெரிவித்தார். அவரது பொழுதுபோக்கே அவருக்கு பணியாக அமைந்ததால் இந்த துறையில் வேலை செய்வது அவருக்கு மனநிறைவை அளிக்கிறது. வார நாட்களில் வேலை, சனிக்கிழமைகளில் பாடம் என்று அவர் இருந்தாலும், இது அவரது அறிவை விரிவுபடுத்தவும் முற்போக்கான வாழ்க்கைப் பாதையை உறுதிப்படுத்தவும் உதவும் என திடமாக நம்புகிறார். திரு கவீன் எதிர்காலத்தில் சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானி குழுவில் ஒரு நபராக இருக்க விரும்புவதாக பகிர்ந்து கொண்டார்.
"விமானக் கண்காட்சிக்கு நான் சென்றதே இல்லை. அந்த வகையில், இந்த வாய்ப்பு எனக்கு மறக்கமுடியாத அனுபவத்தை அளிக்கும்" என்று தான் நம்புவதாக திரு கவீன் கூறினார்.
தனக்கு முற்றிலும் ஆதரவாக இருந்த தனது நண்பர்கள், தாய் தந்தையார் ரமேஷ், மேரி மற்றும் சக பணியாளர்களுக்கு (தெங்கா ஏர்பேஸ்-805 SQN) மூன்றாம் சார்ஜண்ட் கவீன் சான்ஷ்ரே தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.