ஹர்ஷிதா பாலாஜி
லிட்டில் இந்தியாவின் கிளைவ் ஸ்திரீட்டில், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம் எனப்படும் லிஷாவின் ஆதரவுடன் நடைபெறும் "தி ரங்கோலி மூவ்மென்ட்" நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக அமைகிறது அதன் "டான்ஸ் பெவிலியன்" எனப்படும் நடனக்கூடம்.
இக்கூடத்தில், பங்கேற்பவர்கள் அங்கு அமைக்கப்பட்ட சின்னஞ்சிறு மேடைகளின் மேல் நின்று ஆடியவாறு கண்ணைக் கவரும் வண்ண விளக்கொளிக் கோலங்களை உருவாக்கலாம்.
மேடையில் ஐந்து முறை ஆடினால், எதிரில் இருக்கும் எல்இடி திரைகளில் ஒரு கோலம் தோன்றும். பங்கேற்பாளர்கள் ஆட ஆட, வெவ்வேறு விதமான அற்புதக் கோலங்கள் திரையில் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
திரையில் தோன்றுகின்ற இக்கோலங்கள், மெதுவாக மேலே மிதந்து கூடத்தின் கூரையில் உள்ள பெரிய கோலத்தோடு இணைந்துவிடும்.
மேலும், கூடத்திலிருக்கும் 'கியூஆர்' குறியீட்டை திறன்பேசியை கொண்டு 'ஸ்கேன்' செய்தால், இணையத்தளத்தின் வழியாக கோலங்களை வண்ணமிட்டு அவற்றை கூரையிலிருக்கும் பெரிய கோலத்துடன் திறன்பேசி வழியாகவும் இணைக்கலாம்.
இதுபோன்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகள், ஒலி மற்றும் அசைவுகளை உணரக்கூடிய, ஈடுபாடுமிக்க அனுபவத்தைப் பங்கேற்பாளர்களுக்கு அளிக்கின்றன.
"சிங்கப்பூரிலுள்ள மற்ற இனத்தவரும் இந்திய கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளவே இதுபோன்ற மாறுபட்ட, புதிய முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்," என்றார் 'டெக்ஸ்சர் மீடியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்டர் சூ.
"சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இங்குள்ள மேடைகளில் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்வதை நாங்கள் பார்க்கின்றோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நடனத்தையும் கோலத்தையும் இணைக்கும் இந்த நடனக்கூடத்தை தொழில்நுட்ப உதவியுடன் அமைத்துள்ளது 'டெக்ஸ்சர் மீடியா' நிறுவனம்.
"நடனத்துடன் ரங்கோலியை இணைக்கும் 'டான்ஸ் பெவிலியனை' தவிர, 'ஆர்ட்டிஸ்ட் பெவிலியன்' எனப்படும் கலைஞர் அங்கத்தில் ரங்கோலி கலைஞரான திருமதி விஜயா மோகனின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒர்க்ஷாப் பெவிலியனில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரங்கோலி பயிலரங்குகளும் 'விஷுவல் ஆர்ட்ஸ் சென்டர்' நடத்தும் 'மணல் கலை' பயிலரங்குகளும் நடைபெறுகின்றன. இந்த இலவச நிகழ்ச்சி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறும்.