திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சி கடல்பகுதியில் 218 கிலோ எடை கொண்ட ஹெராயினை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் பறிமுதல் செய்தனர்.
அனைத்துலக கள்ளச்சந்தையில் இந்தப் போதைப்பொருளின் மதிப்பு 1,526 கோடி ரூபாய் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொச்சி கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை, இந்தியக் கடலோரக் காவல்படையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்ேபாது ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வந்த கப்பலில் இருந்து சில மூட்டைகள் தமிழக மீனவர்களின் இரு விசைப் படகுகளில் ஏற்றப்பட்டன.
அதன்பிறகு, அரபிக்கடல் பகுதிக்குள் புகுந்து கேரளா நோக்கி படகுகள் விரைந்தன.
இதைக் கண்ட அதிகாரிகள், பிரின்ஸ், லிட்டில் ஜீசஸ் என்ற இரு படகுகளையும் துரத்திச் சென்று சோதனை போட்டனர்.
படகுகளில் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் அறையில் சாக்கு மூட்டைகளில் தலா ஒரு கிலோ எடையுடன் 218 பொட்டலங்களில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இரு படகுகளிலும் இருந்த கேரளாவைச் சேர்ந்த 4 மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள் என ஒட்டுமொத்தமாக 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
'ஆப்ரேஷன் கோஜ்பீன்' என்ற கூட்டு நடவடிக்கையின் கீழ், கொச்சி துறைமுகத்துக்கு அழைத் துச் சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்த ஹெராயினை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் விற்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறினர்.
இந்த போதைப் பொருள் எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது? பின்னணியில் இருக்கும் அனைத் துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல் யார் என்பன குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.
மீன்பிடித் தொழிலின் போர்வையில் மீனவர்கள் வெளிநாட்டில் இருந்து இவ்வளவு அதிக அளவில் ஹெராயினை கடத்தி வந்துள்ள சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது.