பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் திட்டமிடல், மேலாண்மை போன்ற பாடங்களைப் பயிலும் மாணவர்கள் அவற்றில் நேரடி அனுபவம் பெற வாய்ப்பளிக்கும் வகையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
நலத்திட்டங்களை வடிவமைக்கவும் நடைமுறைப்படுத்தவும் குடியிருப்பாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள இந்த உடன்படிக்கைகள் வாய்ப்பளிக்கும் என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் நேற்று அவரது முன்னிலையில் உடன்பாடுகள் கையெழுத்தாயின.
இவற்றில் ஒன்று, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் புதிதாகச் செய்துகொள்ளப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மைத் துறையில் பட்டயக் கல்வி வழங்க இது உதவும்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் முதுமை தொடர்பான சமூக அறிவியல் துறைப் பட்டயக் கல்வியை வழங்க வகைசெய்யும் மற்றோர் உடன்படிக்கை நேற்று புதுப்பிக்கப்பட்டது.
சமூகத்துடனான இருவழித் தொடர்பு குறித்த மாணவர்களின் புரிதலை மேம்படுத்த வீவக உரை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் என்று கூறப்பட்டது. மாணவர்களின் முயற்சிகளைப் பாராட்டி புத்தகப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் முன்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6,300க்கும் அதிகமான மூத்த குடிமக்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தியதாக அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
கூட்டு உடற்பயிற்சி, இசை நிகழ்ச்சி, கலை, கைவினைப் பொருள் பயிலரங்கு போன்றவை இவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியுடனான புதிய உடன்படிக்கையின்கீழ் ஆண்டுதோறும் ஏறக்குறைய 100 மாணவர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவர் என்று நிகழ்ச்சியில் நேற்று தெரிவிக்கப்பட்டது.