யுகேஷ் கண்ணன்
முனீஸ்வரன் சமூகசேவை மையமும் சிண்டாவும் இணைந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்பவர்களுக்காக உயில்கள் பற்றிய விழிப்புணர்வுப் பயிலரங்கையும் உயில் எழுதும் நிகழ்ச்சியையும் இலவசமாக நடத்தியுள்ளன.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத் திருமண மண்டபத்தில் இம்மாதம் 2ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விழிப்புணர்வுப் பயிலரங்கு நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இலவச உயில் எழுதும் சேவை இடம்பெற்றது.
பயிலரங்கை வழக்கறிஞர் ஜோதி ராமலிங்கம் வழிநடத்தினார். இலவச சேவை நிகழ்ச்சியில் மொத்தம் 10 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, கொவிட்-19 கிருமிப்பரவலால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நடத்தப்படுவதாக முனீஸ்வரன் சமூக சேவை மையத்தின் தலைவர் ம.ப. கணேசன் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தில் பலருக்கும் உயில்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லை; இதனால் குடும்ப உறுப்பினரின் இறப்புக்குப் பிறகு பல பிரச்சினைகள் தலையெடுக்கக்கூடும் என்பதை இவர் சுட்டினார்.
"இதற்குத் தீர்வுகாணும் நோக்குடன் இலவசப் பயிலரங்கு, உயில் எழுதும் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தோம். வீவக இல்லங்களில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது," என்றார் திரு கணேசன்.
நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட இவர், இளையர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் தொண்டூழியம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முனீஸ்வரன் ஆலயத்தில் 30 ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவருகிறார் இந்நிகழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான 65 வயது ஹரிபிரசாத்.
பொறியியல் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணிபுரியும் இவர், "இந்தியர்களில் பலர் இறப்பைப்பற்றியும் அதன் பிறகு தங்களது சொத்துகளின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பேசவோ சிந்திக்கவோ தயங்குகின்றனர். ஆனால், இறந்தபின் உடைமைகள் யாரைச் சேரவேண்டும் என்று முன்பே முடிவெடுப்பது, பிற்காலத்தில் குடும்பத்தினரிடையே ஏற்படக்கூடிய சண்டைகளையும் பூசல்களையும் தடுக்கும்," என்றார்.
உயில் எழுத 300 வெள்ளியிலிருந்து 400 வெள்ளி வரை செலவாகலாம்; கட்டணத் தொகை காரணமாக யாரும் உயில் எழுதாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்பட்டது என்றார் இவர்.
முன்பே உயில் எழுதியிருந்தாலும், அதுகுறித்த முக்கியத் தகவல்களையும் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள இப்பயிலரங்கில் கலந்துகொண்டதாகக் கூறினார் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியரான 78 வயது சுதந்திர வேலு.
உயிருடன் இருக்கையில் உயில் எழுதி, நமது சொத்து, நகை, பணம் போன்றவற்றை மனத்திற்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது அவர்களின் ஆனந்தத்தைக் காண வாய்ப்பளிக்கும் என இவர் கருதுகிறார். இத்தகைய வாய்ப்பை இழக்க விரும்பாததால் ஏற்கெனவே உயில் எழுதியுள்ளதாகத் திருவாட்டி சுதந்திர வேலு தெரிவித்தார்.
இதனை எடுத்துக்கூறி தனது சகோதர, சகோதரிகளையும் உயில் எழுதச் செய்துள்ள இவர் இதுவரை உயில் எழுதாத தனது நண்பர்களையும் உயில் எழுத ஊக்குவித்து வருகிறார்.
தனது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது குடும்பத்தில் பல குழப்பங்களும் பிரச்சினைகளும் எழுந்ததால் எதிர்காலத்தில் அச்சூழ்நிலையைத் தடுக்க, தான் இந்த உயில் எழுதும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார் தொழிலதிபர் மகாலட்சுமி.
உயிருடன் இருக்கையிலேயே, இறந்தபின் சொத்து, பணம் போன்றவை யாருக்குச் செல்லும் என முடிவெடுத்துக்கொள்வது நமக்கு மன நிம்மதியளிப்பதோடு நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் என்கிறார் 60 வயதாகும் திருவாட்டி மகாலட்சுமி.
முனீஸ்வரன் சமூகசேவை மையமும் சிண்டாவும் இணைந்து இதுபோன்ற இலவச நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
படம்: யுகேஷ் கண்ணன்