தமிழ் மாணவர்களின் படைப்புத் திறனைப் பட்டை தீட்டும் கல்வி அமைச்சின் நிகழ்ச்சி
யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூரின் தமிழ் மாணவர்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து, மெருகூட்ட உதவுவதே 'நானும் ஒரு படைப்பாளி' நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமென கல்வி அமைச்சின் தாய்மொழிகள் துறையில் தமிழ்மொழிப் பிரிவுக்கான மூத்த உதவி இயக்குநராகப் பணிபுரியும் திருவாட்டி மும்தாஸ் காசிம் கூறினார்.
1990களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடத்தப்படும் பல்வேறு பயிலரங்குகளின்வழி தமிழ் மாணவர்கள் சிறுகதை, நாடகம், கவிதை ஆகியவற்றை எழுதக் கற்கின்றனர்.
இவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நேற்றுக் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினரான கல்வி அமைச்சின் தாய்மொழித் துறை இயக்குநர் ஹெங் போய் ஹோங், குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியமும் அரங்கேறின.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சிறந்த படைப்புகளை இயற்றிய மாணவர்கள், மேடையில் அவற்றைப் படைத்தனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறுகதைகளையும் நாடகங்களையும் படைத்த வேளையில் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் கவிதைகளைப் படைத்தனர்.
'நானும் ஒரு படைப்பாளி' பயிலரங்குகளில் பங்கேற்ற 330 மாணவர்களுள் சிறந்த பங்கேற்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 93 மாணவர்களுக்கு நேற்று பரிசுக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவி வடிவேல் பவித்ரா, 13, தொடர்ந்து இதுபோன்ற பயிலரங்குகளில் பங்கேற்க விரும்புவதாகத் தெரிவித்தார். "குறட்டை" என்ற தலைப்பில் நான்கு வயதுக் குழந்தை ஒன்று பெருவிரைவு ரயிலில் கோளாறு ஏற்பட்டவுடன் செய்யும் சேட்டைகளை கதைக்கருவாகக் கொண்டு இவர் எழுதிய கதையை மேடையில் படைத்தபோது சிரிப்பொலி அரங்கை நிறைத்தது.
கொவிட்-19 கிருமித்தொற்றை மையமாகக் கொண்ட கவிதையை எழுதினார் தேசிய த் தொடக்கக் கல்லூரி மாணவி, பிரீத்தி மகேசுவரன், 17. இந்நிகழ்ச்சியின் வாயிலாக எவ்வாறு எளிய, கருத்துள்ள கவிதைகளை நயமாக எழுதுவது என்பதைக் கற்றுக்கொண்டதாக இவர் கூறினார். இதற்குமுன் கவிதை எழுதிய அனுபவம் இல்லாததால் முதலில் சவாலாக இருந்தாலும் பயிற்றுவிப்பாளர்களின் உதவியோடு அதைக் கடந்து வந்ததாக இவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் மாணவர்கள் முன்வந்து ஆர்வத்துடன் ஈடுபடுவது மனநிறைவை அளிப்பதாகக் கூறினார் திருவாட்டி மும்தாஸ். அவர்களது திறமைகளுக்கான தளமாகத் தொடர்ந்து "நானும் ஒரு படைப்பாளி" இருக்குமென இவர் உறுதியளித்தார். இனி வரும் ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி மெய்நிகர் முறையிலும் நேரடியாகவும் நடைபெறவிருக்கிறது.