கெய்ரோ: எகிப்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீ மூண்டதால் குறைந்தது 41 பேர் மரணமடைந்தனர். கிஸா நகரில் உள்ள அபு சிஃபின் தேவாலயத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 45 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் மின்சாரம் தொடர்பிலான காரணங்களால் தேவாலயத்தில் தீ மூண்டது. இம்பாபா எனும் குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்த தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக சுமார் 5,000 பேர் திரண்டிருந்ததாக தகவல்கள் கூறின.
தேவாலயத்தின் ஒரு நுழைவாயில் தீயால் அடைக்கப்பட்டது. அதனால் பலர் மிதிபட்டதாகக் கூறப்பட்டது. மாண்டோரில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட காரணங்களால் தீ மூள்வது எகிப்தில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. 2020ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த இத்தகைய சம்பவத்தில் குறைந்தது எழுவர் மாண்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
எகிப்தின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கிஸா, நைல் ஆற்றுக்கு அருகே தலைநகர் கெய்ரோவிற்கு எதிரே உள்ளது.