சிங்கப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 11,732 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று திங்கள்கிழமை பதிவான 4,719 தொற்று எண்ணிக்கையைவிட இது இரு மடங்கிற்கும் அதிகமாகும்.
‘எக்ஸ்பிபி’ திரிபு காரணமாக தொற்று அதிகரித்தாலும், நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, ‘எக்ஸ்பிபி’ திரிபு காரணமாக சிங்கப்பூரில் கடுமையாக நோய்வாய்ப்படுவோர் மற்றும் மரணம் அடைவோர் எண்ணிக்கை வேகமாகவும் பெரியளவிலும் அதிகரித்து வருவதாகக் கூறும் வதந்திகள் வாட்ஸ்அப்பில் வலம் வந்தன. அவற்றுக்கு எதிராக சுகாதார அமைச்சு ‘பொஃப்மா’ நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெரும்பாலான நோயாளிகளிடம் தொண்டைவலி அல்லது லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக அமைச்சு சொன்னது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 11 பேர் உள்ளனர். 50 பேருக்கு உயிர்வாயு ஆதரவு தேவைப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில் இருந்ததைவிட சற்றுதான் அதிகம் என்று அமைச்சு கூறியது.