முன்னாள் மாணவர்களின் சாதனைகளையும், அவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் தனது 35 முன்னாள் மாணவர்களுக்கு ' நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் விருது' வழங்கிக் கௌரவித்துள்ளது. விருதளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு இரண்டாம் சுகாதார அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃபிலி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அரங்கத்தில் இடம்பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்களுக்கு இந்த விருதுகளையும் அவர் வழங்கினார்.
"நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இவர்களின் சாதனைகளும் தங்கள் துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவதும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உதவியுள்ளது," என்று அமைச்சர் கூறினார்.
"வளர்ச்சி அடைந்த பிறகு சமுதாயத்திற்குத் திருப்பி அளிப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவர்களைப் போன்ற சாதனையாளர்கள், சமுதாயத்தில் மேல்நிலையில் இருப்பவர்களை, மற்றவர்களுக்கு உதவ ஊக்கப்படுத்த வேண்டும்," என்று அமைச்சர் தன் உரையில் குறிப்பிட்டார்.
சிறந்த இளம் நன்யாங் முன்னாள் மாணவர் விருதை முனைவர் சந்தியா ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார்.
விஞ்ஞானியாகவும், தொழில் முனைவராகவும் இருக்கும் இவர், தென்கிழக்கு ஆசியாவின் முதல் உயிரணு அடிப்படையிலான கடல் உணவு, இறைச்சி தயாரிக்கும் "ஷோக் மீட்ஸ்' (Shiok Meats) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
2013ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், புதிய உணவு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருக்கிறார்.
ஷியோக் மீட்ஸ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், இவரின் தலைமையில், இதுவரை $30 மில்லியன் டாலர் ரொக்கத்தை, அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியுள்ளது.
உணவின்மேல் அதிக விருப்பம் கொண்டுள்ள சந்தியா, "இந்த த் துறைமீது அதிக நாட்டம் உள்ள எனக்கு இதில் ஏதாவது ஒரு சாதனை புரிய வேண்டும் என்பது வேட்கையாக இருந்தது.
"நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலாமல் இருந்திருந்தால், என்னால் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது.
"இங்கு நான் கற்றுக்கொண்ட பாடங்களும் திறன்களும் என் துறையில் வெற்றிநடை போடத் தூண்களாக அமைந்தன. அது போலவே, பட்டம் பெற இருக்கும் மாணவர்கள், தாங்கள் கற்றுக்கொண்டதை வருங்காலப் பணியில் பயன்படுத்திக்கொண்டு சாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறினார்.
விருது விழாவில் கலந்துகொண்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், "முன்னாள் மாணவர்களின் சாதனைகளும் அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்கும் இல்லாவிடில், இந்தப் பல்கலைக் கழகம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்க முடியாது," என்று கூறினார்.
செய்தி: அனுஷா செல்வமணி