இன்று மார்கழி முதல் தேதி!
இயற்கையிலேயே எல்லைகள் எதுவும் இல்லாத கால ஓட்டத்தில் வேறுபாடுகளை இனம் கண்டு அவற்றை அட்டவணையாகத் தொகுத்தி தங்களது ஆராய்ச்சியின் நுட்பத்தை நிரூபித்துள்ளனர் பண்டைய இந்தியர்கள். நில வளப்பத்தைப் பெருக்கும் மழையும் சகல உயிர்களுக்கு இதமளிக்கும் குளிர்தென்றலும் நிறைந்த மாதத்தை மக்கள் புனித மாதமாகக் கருதியது அவர்களது நன்றியுணர்வின் பிரதிபலிப்பாகும்.
“மாதங்களில் நான் தனுர் மாதம் (மார்கழி)” என்று கண்ணபிரான் அர்ஜனனுக்கு கூறியதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. தொன்றுதொட்டு இறைவனின் புனித மாதமாக இந்த மாதம் பல்வேறு காரணங்களுக்காகக் கருதப்படுகிறது. மகாபாரத யுத்தம், திருப்பாற்கடல் கடையப்பட்டது உள்ளிட்ட சில இதிகாச புராண சம்பவங்கள் இந்த மாதத்தில் நிகழ்ந்ததாக கூறுகிறது மரபு.
வைணவ சமயத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணாகத் திகழும் ஆண்டாளின் திருப்பாவை நோன்பு மார்கழி மாதத்துடன் தொடர்புடையது.
‘மார்கழித் திங்கள்’ என தொடங்கி அவர் முப்பது பாடல்களை இயற்றியுள்ளார். அவரது பாடல்கள் விஷ்ணு ஆலயங்களில் இன்றும் ஓதப்பட்டு வருகின்றன. இந்து வழிபாட்டு முறையில் தமிழ் காலங்காலமாகப் பெற்றுள்ள சிறப்பு கௌரவத்தின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது திருப்பாவை.
இந்த மாதத்தில்தான் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உள்ளிட்ட விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity