சிங்கப்பூரிலுள்ள வெவ்வேறு இனச் சமூகங்களுக்கு இடையே தேவைகள் மாறுபடுவதால் இன அடிப்படையிலான அமைப்புகள் தொடர்ந்து செயலாற்றுவது அவசியம் என செம்பவாங் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி அணியில் இடம் பெற்றிருக்கும் விக்ரம் நாயர் தெரிவித்தார். கடந்த இருபது ஆண்டுகளாக கல்வித் தேர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் சிங்கப்பூர் இந்தியர்கள் மேம்பட்டதற்கு சிண்டாவும் இந்திய அறநிறுவ னங்களும் முக்கிய பங்குவகிப்பதாக திரு விக்ரம் தமிழ் முரசிடம் தெரிவித்தார். திரு விக்ரம் நேற்று காலை சக வேட்பாளர்களுடன் தொகுதி உலா சென்றிருந்தார்.
“இந்திய சமுதாயத்தில் பொதுவாக இரண்டு பிரச்சினைகள் முன்பு இருந்தன. பாலர் பள்ளி சேர்க்கை விகிதம் மிகவும் குறைவு என்பதால் தொடக்கநிலை ஒன்றில் முதன்முறையாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு ‘கேட்ச் அப் திட்டம்’ நடத்தப்பட்டது. இரண்டாவது, கணிதம், அறிவியல் பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிண்டாவின் ஸ்டெப் துணைப்பாடத் திட்டம் நடத்தப்பட்டன,” என்று திரு விக்ரம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒரே மக்களாகப் பார்க்கப்படும்போது, சிண்டா, மெண்டாக்கி, சிடிசி என இன அடிப்படையிலான சமூகநல அமைப்புகள் தேவையில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் கலா மாணிக்கம் நேற்று முன்
தினம் தமிழ் முரசிடம் கூறியது பற்றி கேட்கப்பட்டபோது திரு விக்ரம், அந்தக் கருத்து தவறானது என பதிலளித்தார்.
இன அடிப்படை அமைப்புகள் மூலம் அந்தந்த சமூகத்துடன் இணைவது மேலும் எளிதாவதாகத் திரு விக்ரம் கூறினார். “ நாம் அனைவரும் சிங்கப்பூர்வாசிகள் என்றாலும் ஒவ்வொரு சமூகத்தின் தேவைகளும் சிறிதளவில் மாறு
படுவதால் இந்தத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க சமூக அமைப்புகளால் முடியும்.
“அத்துடன், ஒரே இனம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைவது மனித இயல்பு. அதனால்தான் சிண்டாவைத் தவிர பல்வேறு இனம் சார்ந்த உதவி அமைப்புகளும் அறநிறுவனங்களும் உருவாகி செயல்படுகின்றன,
“இத்தகைய அமைப்புகளின் மூலமாகத்தான் முன்னோடித் தலைவர்கள், இளம் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் சமூக பொறுப்பேற்று பின்தங்கியுள்ள அல்லது வசதி குறைந்த இந்திய இனத்தவர்களுக்கு உதவ முடியும் ,” என்று அவர் கூறினார்.