தொற்றுநோய்ப் பரவலுக்கிடையே பொதுத் தேர்தலை நடத்துவது பொறுப்பற்றது என்றும் சந்தர்ப்பவாதம் என்றும் கூறினார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா.
இதனால் வாக்காளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் அபாயங்கள் உள்ளதெனத் தெரிவித்தார். அமைச்சுநிலைக் குழு, தொற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளிலிருந்து தேர்தல் பிரசாரம் பக்கம் திசை திருப்பப்படும் சூழலுக்கும் நாம் இடமளிக்கக்கூடாது என்றார் அவர்.
அச்சுறுத்துதல் மற்றும் அவதூறு செய்தல் போன்ற பழைய உத்திகளில் மசெகவின் பிரசாரம் குறியாக இருப்பதாக அவர் சொன்னார்.
கட்சியின் தலைமைச் செயலாளரான டாக்டர் சீ சூன் ஜுவானுக்கு ஏன் மசெக அஞ்சுகிறது என்ற தம் காரணத்தையும் அவர் எடுத்துக் கூறினார். இதற்காக திரு கோ சோங் டோங்கின் சுயசரிதையைக் கொண்ட ‘டால் ஆர்டர்’ புத்தகத்தின் பக்கம் 221ல், திரு லீ குவான் இயூ கூறிய சொற்களை அவர் மேற்கோள் காட்டினார்.
‘குழுத்தொகுதி இல்லாமல், டியோ சீ ஹியன் தனியொரு ஆளாக தனித் தொகுதியில் போட்டியிட்டால், சீ சூன் ஜுவான் போன்ற ஒருவருக்கு எதிராக வெற்றி பெற முடியாது’ என்று மறைந்த திரு லீ கூறுவார் என்று புத்தகத்தில் எழுதியிருந்ததை அவர் குறிப்பிட்டார்.
மேலும் 10 மில்லியன் மக்கள் தொகை விவகாரம் குறித்து சிஜகவையோ மசெகவையோ நம்ப வேண்டாம் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழைப் பார்த்து முடிவெடுங்கள் என்றும் அவர் சிங்கப்பூரர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் எதிர்காலத்தைப் பற்றிய இத்தேர்தல், மிக முக்கியமானது என்றார். ‘4 ஆமாம், 1 இல்லை’ என்ற சிஜகவின் முக்கியச் செய்தியையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பொருள் சேவை வரியை 2021ஆம் ஆண்டு இறுதி வரை நிறுத்திவைப்பது, ஆட்குறைப்பு காப்புறுதித் திட்டம், குறைந்த வருமானம் ஈட்டும் மூத்தோருக்கு ஓய்வுகால ஊதியம் போன்றவற்றிற்குக் கட்சி ‘ஆமாம்’ என ஆதரிக்கிறது.
“மக்களை முன்னிலைப்படுத்தி வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, மக்கள் தொகை, கல்வி, பருவநிலை மாற்றம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் முழுமையான கொள்கை அறிக்கைகள் உள்ளதாக அவர் சொன்னார். அத்துடன் நாட்டின் இருப்புகளில் கை வைக்காமல் செலவுகளைச் சமாளிக்க முடியும். முழுமையான நகர மன்றத் திட்டம் தன் கட்சிவசம் இருக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் சொன்னார். ஒரு நிர்வாக முகவருக்கான செலவின்றி, கட்சியே நகர மன்ற நிர்வாகத்தை ஏற்று நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீக்கு எதிரான பாதுகாப்பு, தாமதிக்கப்பட்ட மின்தூக்கி மேம்பாடு, அளவுக்கு அதிகமான சத்தம், பிள்ளை மற்றும் குழந்தை பராமரிப்பு இன்மை போன்ற குடியிருப்பாளர்கள் தொடர்பான விவகாரங்களைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும் திரு பால் தம்பையா தெரிவித்தார். நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்க மக்களுக்கென சிஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகப் பாடுபடுவர் என்றார் அவர்.