இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார் கமலா ராஜேந்திரன், 45.
இவர் கடந்த பத்து மாதங்களாக மாதத்திற்கு ஒரு முறை தன் கையால் சமைத்த உணவினை கஃப் சாலையில் காத்திருக்கும் ஊழியர்களுக்கு வழங்கி வருகிறார்.
சிறுவயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய கமலாவிற்கு 18 வயதில் திருமணமாகி, மூன்று பிள்ளைகளுக்கு தாயானார்.
துபாய் சென்ற இவரின் கணவர் உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு கலங்கிப்போனார்.
இனி பிள்ளைகளுக்கு தான்தான் வழிகாட்டவேண்டும் என்ற முடிவுடன் சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.
11 ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை செய்து மாதம் 550 வெள்ளி சம்பளத்தை தனக்கென ஒதுக்கிக்கொள்ளாமல் பிள்ளைகளுக்கு முழுமையாக அனுப்பத் தொடங்கினார்.
தமிழகத்திலிருந்து வந்து இங்கு கட்டட வேலை செய்யும் பலர் வீட்டில் சமைக்கும் உணவுக்கு ஏங்குவதை அறிந்தார்.
கடந்த பத்து மாதங்களாக வீட்டு உரிமையாளரின் அனுமதியோடு தனது விடுமுறை நாளில் உணவு சமைத்து, அதைப் பொட்டலம் போட்டு, பீச் ரோடில் இருந்து லிட்டில் இந்தியா வரை அந்த உணவுப் பொட்டலங்களை தள்ளுவண்டியில் வைத்து நடந்தே தள்ளிக்கொண்டு செல்கிறார். காலை தொடங்கி மாலை வரை வழியில் தென்படும் ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அவர் எப்போதும் வெள்ளை உடையுடன் இருப்பதால் பலர் அவரைச் சந்தேகத்துடன் பார்த்ததாகவும் பகிர்ந்துகொண்டார். யார் என்ன நினைத்தாலும் தன்னுடைய இந்தச் சேவையை தொடர உறுதி பூண்டிருக்கிறார் கமலா ராஜேந்திரன்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தங்குவிடுதி ஊழியர்களின் தற்போதைய வாழ்க்கைமுறையை சித்திரிக்கும் சிறப்புக் காணொளியைப் பார்க்க ‘கியூஆர்’ குறியீட்டை வருடவும்.