பொதுமக்கள் மண்டாய் எக்சிகியூட்டிவ் கோல்ஃப் திடலில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடலாம். 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை குத்தகையை நீட்டிக்க, அதன் நடத்துநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.
பொதுமக்கள் கோல்ஃப் விளையாடுவதற்காக வழங்கப்படும் தெரிவுகளில் ஒன்று அது என அவர் சொன்னார்.
“பொதுமக்கள் கோல்ஃப் விளையாடுவதற்கு தொடர்ந்து வழிகள் அமைப்பது முக்கியம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால் கோல்ஃப் திடல்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது,” என்று திரு சுவா கூறினார்.
இங்குள்ள 14 தனியார் கோல்ஃப் திடல்களை பொதுப் பயன்பாட்டுக்காக மாற்ற திட்டங்கள் உள்ளனவா என்று செங்காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துப் பேசினார்.