வட்ட ரயில் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பயணிகள் ஜூன் 11 முதல் ஜூலை 20 வரை 30 நிமிடங்கள்வரை தாமதத்தை எதிர்பார்க்கலாம்.
டோபி காட், பிராஸ் பாசா, எஸ்பிளனேட், புரோமனேட், நிக்கல் ஹைவே, மரினா பே, பேஃபிரண்ட் ஆகிய ஏழு நிலையங்களில் சேவை பாதிக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) நேற்றுத் தெரிவித்தது.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் ஆறு வார காலத்தில் பெரும்பாலான நாட்களில் இரவு 9 மணி முதல் ஒரே ஒரு நடைமேடையில் இருந்து ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடைவழிச் சேவையாக இரு ரயில் சேவைகள் செயல்படும்.
புரோமனேட், நிக்கல் ஹைவே, நிலையங்களுக்கு இடையே உள்ள வட்ட ரயில் பாதையின் சுரங்கப் பாதையில் ஒரு பகுதி “அதிக அழுத்தத்திற்கு உட்பட்டது” என்று வழக்கமான சோதனையின்போது தெரிய வந்ததாக ஆணையம் கூறியது. எனினும் அது குறித்து விரிவான விளக்கங்களை அது வெளியிடவில்லை.
“வட்ட ரயில் பாதையின் ரயில் சேவைக்கு இது எந்தப் பாதுகாப்பு அபாயத்தையும் ஏற்படுத்தாது என்று மதிப்பிட்டுள்ளது,” என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், சுரங்கப் பாதை நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையுடையதாக இருப்பதை உறுதிசெய்ய சுரங்கப்பாதை உருளைகளுக்கு இரும்பு நிறுவுவது உட்பட முன்னெச்சரிக்கை பராமரிப்பு, வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதாகவும் அது கூறியது.
இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், ஜூன் 11 முதல் ஜூலை 20 வரையிலான காலத்தில் இரவு 9 மணி முதல் இயக்க நேரம் முடியும் வரை இடைவழிச் சேவையாக (ஷட்டல்) ஏழு நிலையங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.
ஜூன் 16 முதல் 18 வரையும், 24, 28, 29 ஆகிய நாள்களிலும் ஜூலை 1, 2, 7, 8 ஆகிய தேதிகளிலும் 14 முதல் 16 வரையும் ரயில்கள் வழக்கமாக இயங்கும், எந்த இடையூறும் இருக்காது.
இரண்டு இடைவழிச் சேவைகள் இயங்கும். ஒன்று டோபி காட் - ரோமனேட் இடையே 15 நிமிட இடைவெளியில் இயங்கும். மற்றொன்று மெரினா பே - ஸ்டேடியம் நிலையங்களுக்கு இடையே 20 நிமிடங்களுக்கு இடையே சேவையாற்றும்.
மேலும் விவரங்களுக்கு எல்டிஏயின் MyTransport.SG செயலி மற்றும் சமூக ஊடகத் தளங்களையும், வட்ட ரயில் பாதையை நிர்வகிக்கும் எஸ்எம்ஆர்ட்டியை நாடவும்.
சுவரொட்டிகள், நிலைய அறிவிப்புகள் அனைத்து வட்ட ரயில் பாதை ரயில் நிலையங்களிலும் மற்றும் வட்ட ரயில் பாதை நிலையங்களுடனான இணைப்பு நிலையங்களிலும் இடம்பெறும். மேலும் பாதிக்கப்படும் ஏழு நிலையங்களிலும் உதவிக்கு ஊழியர்கள் இருப்பார்கள் என்று ஆணையம் தெரிவித்தது.