சிங்கப்பூரின் ஆகப் பழைமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோயில், தேசிய நினைவுச்சின்னங்களுக்கான நிதியைப் பெற தகுதிபெற்றுள்ளது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் இதன்மூலம் 600,000 வெள்ளி வரையிலான நிதியைப் பெறலாம் என்று அக்கோவிலின் தலைவர் எஸ்.லட்சுமணன் தெரிவித்தார்.
கிடைக்கும் நிதி, ஒப்புதல் பெற்ற மறுசீரமைப்புப் பணிகளுக்கும் தேசிய நினைவுச்சின்னத்தைப் பராமரிக்க அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பழுதுபார்த்தல், கோவில் முழுக்க வண்ணம் பூசுவது போன்றவை முக்கியமான மேம்பாட்டுப் பணிகளாகக் கருதப்படுகின்றன.
கோவிலுக்குப் பயன்படுத்தப்படும் சாயம் நீண்ட நாள் மங்காமல் இருக்க தேசிய நினைவுச்சின்னங்களை மறுசீரமைப்பு செய்யும் சாய வல்லுநர்களிடம் ஆலோசனைகள் நடத்தியதாக திரு லட்சுமணன் கூறினார்.
தேசிய மரபுடைமைக் கழக நினைவுச்சின்னமான ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு, கனமழையும் பொருட்படுத்தாமல் 25,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சூழ கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடந்தது.