சிங்கப்பூரின் ஆகப் பழமையான, தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 20,000 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக குடமுழுக்கு கண்டது.
இது, 1827ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆலயத்தின் ஆறாவது குடமுழுக் காகும். பத்தாம்கால யாகபூஜை, தொடர்ந்து கடம் புறப்பாட்டிற்குப் பிறகு காலை 8.20 மணிக்கு ராஜகோபுரத்திற்கும் 8.45 மணிக்கு மூல சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நடந்தது.
மழையையும் பொருட்படுத்தாது குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், உடற்குறையாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் சக்தி பராசக்தி’ என ஒரே குரலாக மனமுருகி மெய்மறந்து பக்தி முழக்கமிட்டனர்.
இக்கோயிலில் தேசிய மரபுடைமைக் கழகத்தின் நினைவுச்சின்னப் பாதுகாப்பு வாரியத்தின் வழிகாட்டுதலின்கீழ் பழமை மாறாத வகையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் நடந்தன.
குடமுழுக்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், “இது போன்ற சமய விழாக்களில் ஒன்றிணைந்த சமூகமாக அனைவரும் பங்கேற்பது, சிங்கப்பூரின் பல இன, பல சமய நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இதில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,’’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
“இத்திருவிழா நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்ததன் அடையாளமாய் அமைகிறது,’’ என்று விழாவிற்கு வந்திருந்த போக்குவரத்து அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் கூறினார்.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, “இந்துக்கள் அல்லாதோரும் விழாவில் கலந்துகொண்டு தொண்டூழியத்திலும் ஈடுபடுவது நாம் ஒன்றிணைந்த சமூகமாக வாழ்வதை எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.
“அன்னதானத்தில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது“ என்று இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜ சேகர் கூறினார்.
“குடமுழுக்கு ஏற்பாடுகள், சீரமைப்புப் பணிகள் என மொத்தம் $3.5 மில்லியன் செலவில் இவ்விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேறிஉள்ளது.
“கோயில் ஊழியர்கள், தொண்டூழியர் என 2,000க்கும் மேற்பட்டோரின் கடும் உழைப்பை பக்தர்களின் மனநிறைவில் காண முடிகிறது“ இந்தக் கோயிலின் தலைவர் எஸ். லட்சுமணன் கூறினார்.
குடமுழுக்கைத் தொடர்ந்து தொடங்கிய அன்னதானம் மாலை 4 மணி வரை நடந்தது. அதன்பின் இரவு 7 மணிமுதல் நடந்த முருகன்-வள்ளி-தெய்வானை; ராமர்-சீதா; விஸ்வநாதர்-விசாலாட்சி திருக்கல்யாணங்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.