தளவாடத் தொழில் துறைக்கு ஏற்ப திறனாளர்களைப் பயிற்றுவிக்க புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது. தளவாடத் துறை திறனாளர்கள் மாற்றுத் திட்டம் (பிசிபி) என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும். இதில் தளவாடத்துறை அதிகாரிகள், தளவாடத்துறை நிர்வாகிகள் போன்ற பதவி வகிப்போர், திறனாளர்கள், மேலாளர்கள் ஆகி யோருக்காக 150 இடங்களை அளிக்கும். 'தி சப்ளை செயின் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் அகாடமி' என்ற பயிலகம் இந்தத் திட்டத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளது. அது ஊழியரணி மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படும்.
நேற்று நடந்த இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, "சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காட்டு பங்கு தளவாடத் தொழில் துறை மூலம் வருகிறது. மேலும் அது 200,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இந்தத் தொழில் துறையில் புத்தாக்கம், செயல்திறன் மேம்பாடு, சிறப்பு நிபுணர்கள், தளவாடம் தொடர்பான தீர்வுகள், திட்டச் செயலாக்கம் போன்ற பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார். "நிறுவனங்கள், சேவை வழங்குவோர் ஆகியவற்றுடன் தொழில்நுட்பம், பல்வேறு நடை முறைகளுக்கு இடையேயான ஒன்றிணைப்பு ஆகியவற்றின் மூலம் குறுகிய காலத்தில் பணிகளைக் குறைந்த அளவிலான தவறுகளுடன் சிறப்பாகச் செய்ய முடியும்.
"சிறப்பாக செயல்படுவதற்கு நிறுவனங்கள் தொழில்நுட்பம், ஊழியர்கள் உதவியுடன் சேவைகளை குறைந்த விலையிலும் நிறைவாகவும் சிறப்பாகவும் எல்லா நேரங்களிலும் செய்ய முடியும்," என்றார் அமைச்சர் லிம்.