சிங்கப்பூர் ஆயுதப்படையின் பழுத்த அனுபவசாலிகளான முன்னோடிகள் 50 பேர் ஒன்றிணைந்து ஆயுதப்படையில் அக்காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களையும் பொன்விழா கொண்டாட்டத்தில் தங்களது பங்களிப்புப் பற்றிய அனுபவங்களையும் தொகுத்து நூல் ஒன்று எழுதியுள்ளனர். '50 எஸ்ஏஎஃப் பயனியர்ஸ்" என்று பெயரிடப்பட்ட அந்த நூல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 212 பக்கங்களைக் கொண்ட அந்நூலில் முன்னோடி வீரர்கள் 50 பேரும் ஆயுதப்படைப் பணியில் சேரும்போது அங்கிருந்த குறைவான வளங்களை வைத்துக்கொண்டு தாங்கள் ஆற்றிய பணி பற்றிய மலரும் நினைவுகளை இந்த நூலில் நினைவு கூர்ந்துள்ளனர்.
தெமாசெக் கிளப்பில் சனிக் கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். அப்போது அந்த முன்னோடிகளில் சிலர் தற்காப்புத் தூதுவர் களாக நியமிக்கப்பட்டனர். இந்தப் பொறுப்பு வகிப்பதன் மூலம் அவர்கள், இப்போதைய ஆயுதப்படை வீரர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் வரலாற்றுச் சிறப்புமிகு தங்கள் அனுபவங்கள், அப்போதைய ராணுவ செயல்பாடு போன்றவை பற்றி பகிர்ந்துகொள்ளலாம். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் 'எஸ்ஏஎஃப் கேர் ஃபண்ட்' நிதிக்காக $100,000 திரட்டப்பட்டது.
இந்த நிதி, சேவைக்காலத்தின்போது உடல் உறுப்பு செயலிழக்கும் வகையில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலான உதவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும். திரட்டப்பட்ட நிதிக்கு நிகரான தொகையைத் தற்காப்பு அமைச்சு வழங்கும். ஆயுதப்படை அனுபவங்களை நினைவுகூரும் இந்த நூல் விற்பனையில் விடப்பட மாட்டா. ஆதரவாளர்கள், பள்ளிகள், ஓய்வுபெற்ற ஆயுதப்படை வீரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.