ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் தீ மூட்டியதாக லிம் யிங் சியாங் என்ற 41 வயது சிங்கப்பூரர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. அந்த தீ சம்பவத்தில் இரண்டு காப்பிக் கடைகளும் ஓர் ஈரச் சந்தையும் அழிந்துவிட்டன. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41, புளோக் 493ல் இருக்கும் சந்தையில் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை சுமார் 2.42 மணிக்கு நெட்டிப் பெட்டிகளை லிம் கொளுத்திவிட்டார் என்றும் அப்படிச் செய்தால் தீ மூண்டு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்தே அவர் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு கட்டடத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லிம் தீ மூட்டியிருக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறுகிறது. இத்தகைய குற்றத்திற்கு ஆயுள்தண்டனை விதிக்க முடியும். அல்லது பத்து ஆண்டு வரைப்பட்ட சிறை அல்லது அபராதம் விதிக்க முடியும். லிம் புலன்விசாரணைக்காக ஒருவார காலம் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். வழக்கு அக்டோபர் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் சந்தேகப்பேர்வழி (கோடுபோட்ட சட்டை) கைதானதாக போலிஸ் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்