ஓட்டுநர் இல்லாத பேருந்துகளில் பயணம் செய்ய தயாராங்குங்கள். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கும் (என்டியு) அதன் அருகில் இருக்கும் பைனியர் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இந்தப் புதிய சேவை சோதனை அடிப்படையில் அறிமுகமாகவிருக்கிறது. 'பசுமை பேருந்துகள்' என்று அழைக்கப்படும் இந்த பேருந்துகள் மின்சாரம்/பெட்ரோலில் ஓடும் வாகனங்கள். தேவை ஏற்படும்போது, பேருந்து நிறுத்தும் இடங்க ளிலும் பேருந்து பணிமனைகளிலும் பேட்டரிகள் மின்னூட்டப்படும். இந்த முன்னோட்ட கூட்டு முயற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையம், என்டியுவின் எரிசக்தி ஆய்வுக் கழகம் ஆகியவை இணைந்து செயல்படும். இதற்கான ஒப்பந்த உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. சிங்கப்பூர் அனைத்துலக போக்குவரத்து காங்கிரஸ் கண்காட்சியில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னோட்ட அடிப்படையில் சேவையில் இருக்கும் இரண்டு பேருந்துகளில் விவேக உணர்வுக் கருவிகள் பொருத்தப்படும். அதன் பிறகு தானாக இயங்கும் உணர்வுக் கருவி உருவாக்கப்படும். இந்தக் கருவியால் உள்ளூர் சாலை போக்குவரத்தையும் வானிலை நிலவரங்களையும் கவனித்து பேருந்துகளுக்கு வழிகாட்ட முடியும்.
"அனைத்துலக ரீதியில் தற்போதைய முயற்சிகள் யாவும் கார்கள் மீதே கவனம் செலுத்துவதாக உள்ளது. முதல் முறையாக சிங்கப்பூரில் அறிமுகமாகிறது இந்த முன்னோட்ட தானியக்க பேருந்து சேவை. இதனால், சாலை பாதுகாப்பு மேம்படும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று தூய்மைகேட்டைத் தவிர்க்க முடிவதுடன் மனிதவள சவால்களைச் சமாளிக்க இந்தப் புதிய திட்டம் உதவும்,'' என்றார் என்டியு ஆய்வு பிரிவின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பேராசிரியர் லாம் கின் யோங். இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூரில் முன்னோட்ட திட்டமாகத் தானியக்க வாக னங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுவதை விரிவுபடுத்தும்.
நேற்று அனைத்துலக போக்குவரத்து காங்கிரஸ் கண்காட்சியில் கலந்துகொண்ட மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் நடமாடும் பாவனைகாட்டியைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்