பதிவு செய்யப்படாத சமய போதகர் ஒருவர் வெளியிட்ட ஒன்பது நூல்களில் பயங்கரவாதச் சமய கருத்து கள் இடம்பெற்றிருந்ததால் விரும்பத்தகாத வெளியீடுகள் சட்டத்தின்கீழ் அந்த நூல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால் அந்த நூல்களை விநியோகிப்பதோ வைத்தி ருப்பதோ குற்றமாகும். அந்த நூல்களை வைத்திருப்போர் அவற்றை போலிசிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சிங்கப்பூரரான ரசூல் டஹ்ரி வெளியிட்ட அந்த நூல்களில் மற்ற சமயத்தினரை இழிவுபடுத்தும் பயங்கரவாதச் சமயக் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று தெரிவித்தது.
அவற்றில் திரு ரசூல் சமயச் சார்பற்ற அரசியல் சிந்தனையை நிராகரிப்பதுடன் முஸ்லிம்கள் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது. பல்வேறு சமயக் குழுக்களிடையே பகைமையையோ வன்முறையையோ தூண்டும் தனிநபர்கள் அல்லது நூல்களை சிங்கப்பூர் சிறிது அளவும் சகித்துக்கொள்ளாது என் பதை அமைச்சு வலியுறுத்தியது. இதனாலேயே அந்த நூல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. "பல கலாசார, பல இன சமுதாயமாக சிங்கப்பூர் கொண்டிருக்கும் பண்புநெறிகளைப் பயங்கரவாதச் சித்தாந்தங்களைத் தூண்டக்கூடிய ரசூல் டஹ்ரியின் போதனைகள் நிராகரிக்கின்றன," என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தமது அறிக்கையில் தெரிவித்தார்.