பிற இனத்தவரின் மனதைப் புண்படுத்தும் விதமாக ஷீனா புவா என்ற இன்ஸ்டகிராம் பிரபலம் பதிவு ஒன்றை வெளியிட்டதாக இணையத்தில் பலர் குறைகூறிவந்தபோதும் அந்தச் சர்ச்சை இறுதியில் நல்ல முறையாக ஓய்ந்துள்ளது.
கடந்த வார இறுதியின்போது ‘சிங்கப்பூர் கிரான்ட் ப்ரீ’ கார்பந்தய வளாகத்தில் நிகழ்ந்த கலைநிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த புவாவை நெட்டையாக இருந்த ஆடவர்கள் இருவர் முன்னால் அமர்ந்து மறைத்துக்கொண்டிருந்ததாக தனது இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளை தலைப்பாகைகளை அணிந்திருந்த அந்த சீக்கிய ஆடவர்களைப் பின்னாலிருந்து காட்டும் படத்துடன் “எங்கிருந்தோ இந்த இரண்டு பெரிய இடைஞ்சல்கள் திடீரென தோன்ற முடிவுசெய்துள்ளன” என்ற வாசகத்தையும் சேர்த்திருந்தார். இதனால் வெகுண்ட இணையவாசிகள், புவாவின் பதிவு இனவாதக் கருத்துடையது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத விதத்தில் உள்ளது என்றும் குறைகூறியுள்ளனர்.
ஆனால் புவாவோ, தாம் சொல்லவந்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார். நிகழ்ச்சியின்போது அந்த ஆடவர் தான் பார்த்துக்கொண்டிருந்ததை முன்னால் இருந்து மறைத்ததற்காக மட்டும் அவர்களை இடைஞ்சல்கள் எனத் திட்டியதாக புவா மற்றொரு பதிவில் தெரிவித்தார். வேறு எந்த இனத்தவருக்கும் பொருந்தக்கூடிய அந்தக் கருத்து, எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைத்துத் தாக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மதிப்பிற்குரிய சீக்கிய சமூகத்தினரின் சமயத்தையும் கலாசாரத்தையும் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அந்தப் பதிவை வெளியிடவில்லை என்றபோதும் தனது பதிவால் ஏற்பட்ட மனவருத்தத்திற்காக மன்னிப்பு கேட்பதாக புவா சொன்னார். அவர் அவ்வாறு கூறியபோதும், இணையவாசிகள் சிலர் இந்த விளக்கத்தால் சமாதானம் அடையவில்லை. இன வாத சர்ச்சையை ஏற்படுத்திய இசைக்காணொளியை வெளியிட்டிருந்த பிரீத்தி நாயர், புவாவை மேலும் கண்டிக்கும் விதமாக,” உங்களது பார்வையை மறைப்பது உங்கள் சிறப்புரிமைதான்,” என்று கூறி, அவர் வேறொரு இருக்கையில் அமர்ந்திருக்கலாம் என்றும் சொன்னார்.
இந்நிலையில் வார்த்தைகளைவிட செயல்களுக்கு மதிப்பு அதிகம் என்பதன்பேரில் புவாவை சீக்கிய ஆலயத்திற்குச் செல்லும் வாய்ப்பை அளிக்க முன்வந்ததாக சிங்கப்பூர் இளம் சீக்கியர் சங்கம் தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. புவா அந்தச் சங்கத்தின் அழைப்பை ஏற்று சென்ட்ரல் சீக்கிய ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள சீக்கியர்களுடன் உறவாடினார். அதனைக் காட்டும் சில படங்களைப் பதிவேற்றம் செய்த இளம் சீக்கியர் சங்கம், தவறுகள் நடக்கும்போது அவற்றைக் குத்திக்காட்டாமல் சம்பந்தப்பட்டவருடன் நட்புணர்வின்பேரில் உறவாடுவதே சாலச் சிறந்தது என்று பேஸ்புக்கில் கூறியது.