தீவு விரைவுச்சாலையில் சில வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் இரு பிள்ளைகள் உட்பட அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு சனிக்கிழமை ( அக்டேபர் 5) பிற்பகல் 2.15 மணி வாக்கில் தகவல் கிடைத்தது.
விரைவுச்சாலையின் வலக்கோடியிலுள்ள தடத்தில் குறைந்தது ஆறு கார்கள் நிறுத்தப்பட்டதைக் காட்டும் ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒன்றோடு ஒன்று மோதிய அந்தக் கார்களில் பெரும்பாலானவற்றின் முற்பகுதியும் பிற்பகுதியும் சேதமடைந்தன.
விபத்தில் காயமடைந்த இரண்டு பிள்ளைகள், கே கே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய நால்வர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தின்போது சுயநினைவுடன் இருந்த அந்த அறுவர் கடுமையாகக் காயமடையவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. துணை மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனை செல்ல மறுத்துள்ளனர்.