சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாக விளங்கும் குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றான பீஷானில் 2025ல் 1,500க்கும் அதிக புதிய பிடிஓ வீடுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அந்த வட்டாரத்தில் உத்தேச பொது வீடமைப்பு தொடர்பில் போக்குவரத்துத் தாக்கம் பற்றிய மதிப்பீட்டை ஆராய்வதற்காக ஏலக்குத்தகை ஒன்றுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
அந்த உத்தேச மேம்பாட்டில் 22 முதல் 39 மாடி உயரம் உள்ள ஆறு குடியிருப்பு புளோக்குகள் உருவாகும் என்று கழகம் தெரிவித் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
அந்தப் புது புளோக்குகளில் கூரைத் தோட்டங்கள் இருக்கும். அவற்றில் மொத்தம் 1,504 ஈரறை, மூவறை, நான்கறை வீடுகள் இடப் பெற்றிருக்கும். குழந்தைப் பராமரிப்பு நிலையம், வசிப்போர் குழு நிலையம், சிறு சந்தை, காப்பிக்கடை இதர கடைகள் என எல்லா வசதிகளோடும் அந்தப் புளோக்குகள் அமைந்திருக்கும்.
புதிய வீடுகள் கட்டப்படுவதற்கான 44,244 சதுரமீட்டர் பரப்புள்ள இடம் பீஷான் ஸ்திரீட் 14ல் காலாங் ஆற்றுக்கு அருகே உள்ளது.