பொருள் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் அடுக்கி வைக்கி வைக்கப்பட்டிருந்த சரக்குகள் சரிந்து விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளும் 'லியோங் ஹப் டிரேடிங்' நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த 28 வயது ஆடவர் இந்திய நாட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் அந்த ஊழியர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்தச் சம்பவம் எண் 40 துவாஸ் சௌத் ஸ்திரீட் 1 என்ற முகவரியில் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
“பொருள் சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாமான்கள் சரிந்து விழுந்ததில் காயமடைந்த அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது குறித்து மனிதவள அமைச்சு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. சம்பவம் நடந்த கிடங்கில் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துக் கூறிய வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங், ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், அந்த ஊழியரின் நிறுவனத்துடன் வெளிநாட்டு ஊழியர் நிலையம் தொடர்புகொண்டதாகவும் மாண்ட ஊழியரின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். விபத்து குறித்த அறிக்கையையும் ஊழியரின் வேலையிட மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை குறித்தும் அந்த நிறுவனம் விரைவில் தெரியப்படுத்தும்,” என்று திரு இயோ தெரிவித்தார்.
பொதுவாக இதுபோன்ற இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு ஆறு மாத காலம் பிடிக்கும். இதற்கிடையில், மாண்ட ஊழியரின் குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்ய வெளிநாட்டு ஊழியர் நிலையம் தயாராக இருக்கிறது என்றார் திரு இயோ.
இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும் வேலையிட விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்.
மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, இது குறித்து கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பதிவில் குரல் கொடுத்திருந்தார். அத்துடன், வேலையிடப் பாதுகாப்பு குறித்து மனிதவள அமைச்சு கூடுதலாக 400 சோதனைகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பைத் தொடர்ந்து இம்மாதம் 12ஆம் தேதி அங் மோ கியோவில் உள்ள வேலையிடம் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ஏராளமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அங்கு வேலை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிறுவனங்களும் ஊழியர்களும் வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திரு இயோ கேட்டுக்கொண்டார்.