பல இன, சமய பின்புலங்களைச் சேர்ந்தவர்களுடன் தனித்தன்மையான சிங்கப்பூர் புத்தாண்டைக் கொண்டாடியவர்களில் கல்வி, சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஃபைசல் இப்ராஹிமும் ஒருவர்.
ஹொக் ஹுவாட் கெங் ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், இத்தகைய நிகழ்வுகளும் இடங்களும் சிங்கப்பூரின் நல்லிணக்கத்தின் அடித்தளமாக உள்ளன என்று தெரிவித்தார்.
சீன, இந்துக் கடவுள்களுக்கு ஒரே இடத்தில் வழிபாடு நடைபெறும் ஹொக் ஹுவாட் கெங் ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயத்தில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் சமய முறைகளின்படி புதிய ஆண்டைக் கொண்டாடினர்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஃபைசல், சிங்கப்பூரில் காணப்படும் நல்லிணக்கமும் அமைதியும் என்றென்றும் தொடரவேண்டும் என்பதே தமது புத்தாண்டு விருப்பம் என்று கூறினார்.
இந்தியர்கள், சீனர்கள் மற்ற இனத்தவர்கள் என கிட்டத்தட்ட 2,000 பேர் அருகருகே இருந்த சீன தெய்வங்களையும் முனீஸ்வரரையும் வழிபட்டு நேற்று இங்கு புத்தாண்டைத் தொடங்கினர்.
உறுமி மேள இசை உட்பட பல இசை நிகழ்ச்சிகளும் நடனங்களும் பக்திப்பாடல்களும் புத்தாண்டுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தின.
“கோயிலுக்கு வந்தவர்கள் பலர் தெரிந்தவர்களாக இருந்ததால், குடும்பத்தினருடன் புத்தாண்டை வரவேற்றது மகிழ்ச்சி,” என்றார் தேசிய இதய நிலையத்தில் சுகாதார உதவியாளராகப் பணிபுரியும் திருமதி விஜயலட்சுமி, 52.
“அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு மனமகிழ்ச்சியை அளிக்கவேண்டும். அதற்காக இந்தப் புத்தாண்டை வழிபாட்டுடன் தொடங்கினேன்,” என்றார் 26 வயது இல்லத்தரசி ஷர்மிளா.
புத்தாண்டை எப்போதும் இந்துக் கோயில்களில் கொண்டாடுவதை பல ஆண்டுகளாக வழமையாகக் கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப ஊழியரான 43 வயது வில்லியம் குவெக், நேற்று இந்த ஆலயத்திற்கு வந்திருந்தார். “உலக அமைதிக்காகவும் நான் முக்தி பெறுவதற்காகவும் இறைவனை வேண்டினேன்,” என்றார் அவர்.
ஓய்வுபெற்ற மளிகைக் கடை முதலாளியான 65 வயது திரு ராமசாமி, சக்கர நாற்காலியில் வந்திருந்தார். இவர் புத்தாண்டை எப்போதும் கோயிலில் கொண்டாடுவார்.
முதியோரின் வசதிக்காகவும் கோயில் அமைந்துள்ள இடத்தை அறியாதவர்களுக்காகவும் நேற்று முழுவதும் ஈசூன் எம்ஆர்டி நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பேருந்து சேவையை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூரின் பல வழிபாட்டுத் தலங்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. நேற்று முன்தினம் இரவு மரினா பே உட்பட நகரின் பல இடங்களிலும் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற களைப்பு இருந்தாலும், காலையில் வழிபாடு செய்வது முக்கியம் என்று அரசாங்க ஊழியரான 39 வயது பிரேம் நாதன் போலவே பலரும் கூறினர்.
பெற்றோர், உறவினர்களுடன் ஒன்றாக விருந்துண்டு மகிழ்ந்தார் குமாரி பானு, 20.
வேலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பும் 25 வயது சுகனைப் போல பல கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொருவரும் 2020ஆம் ஆண்டை நேற்று மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் தொடங்கினர்.