தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ரூ.50,000 செலவு செய்து சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்குச் சென்ற தமிழ் எனும் இளையர் அவரது சொந்த ஊரான வடகாடு கிராமத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர் 26 வயதான திரு தமிழ்.
இவர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர். தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அதில் வாக்களிக்க விருப்பம் கொண்டார் திரு தமிழ்.
வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை உணர்ந்த திரு தமிழ், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் தமிழகத்துக்குச் சென்றார்.
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 30ஆம் தேதி நடந்தது. இதற்காக கடந்த 28ஆம் தேதி வடகாடு கிராமத்திற்குச் சென்ற தமிழ், கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) அன்று வடகாடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவரை கிராம மக்கள் பாராட்டினர்.
பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்போர், உள்ளூரில் இருந்தும் வாக்களிக்கச் செல்லாதோர் ஆகியோரது மத்தியில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கப்பால் இருந்தாலும் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் திரும்பிய திரு தமிழ் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் வாக்களிக்கவும் அவர் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity