மானபங்கம் தொடர்பில் புதிதாக நடப்புக்கு வந்துள்ள திருத்தப்பட்ட குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் தொல்லை கொடுத்ததற்காக ஓர் இந்திய நாட்டவர் குற்றம் மீது சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கம் முதல் புதிதாக நடப்புக்கு வந்துள்ள இத்திருத்தப்பட்ட சட்டப் பிரிவின்கீழ் குற்றம் சாட்டப்படும் முதல் ஆள் 34 வயது முத்து முருகேசன் என்று சொல்லப்படுகிறது.
இரண்டு பேருக்குத் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 377BA பிரிவின்கீழ் முத்து மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின.
தன் கால்சட்டையை அகற்றிவிட்டு தகாத முறையில் நடந்துகொண்டதுடன் தன்னுடைய தகாத செயலை அவ்விடத்தில் இருந்த இருவர் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்துகொண்டதாகவும் முத்து மீது இரு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
செந்தோசாவின் பலாவான் பீச் வாக் பகுதியிலுள்ள ஊஞ்சல்களுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இரவு 10.20 மணியளவில் முத்து குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. அத்துடன் அவர்கள் ஆணா, பெண்ணா என்றும் குறிப்பிடப்படவில்லை.
திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 377BA பிரிவின்கீழ், ஒருவரின் மானத்திற்குப் பங்கம் ஏற்படக்கூடிய வகையில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டுவது, ஒரு பொருளைக் காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சம்பவம் தொடர்பில் கூடுதலான குற்றச்சாட்டுகள் முத்து மீது சுமத்தப்படலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தற்போது $10,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ள முத்து, அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று கூறப்படுகிறது.
#தமிழ்முரசு #மானபங்கம் #புதியசட்டம்