சிங்கப்பூரில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாள்தோறும் புதுப் புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று புதிய கட்டுப்பாடு ஒன்று அறிவிக்கப்பட்டது.
வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு உள்ளிட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்கள் இனி மருத்துவ சிகிச்சைக்காக வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும்.
கொரோனா கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சைக்கு வெளியே சென்றாலோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சைக்கு வெளியே சென்றாலோ முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று நேற்று சுகாதார அமைச்சு கூறியது.
தொற்றுநோய் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டுப்பாட்டை அமைச்சு அமல்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் தீவிர சுவாசச் கோளாறு காரணமாக மருத்துவரிடமிருந்து ஐந்து நாள் மருத்துவ விடுப்பு பெற்றவர்களும் சிகிச்சைக்காக வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கிருமி தொற்றியவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அல்லது கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனையிலோ அல்லது வேறொரு இடத்திலோ தனிமைப்படுத்தப்பட்டவர்களும் புதிய கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற னர்.
அது மட்டுமல்லாமல் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தங்களுக்கு விதிக்கப்பட்டவர்கள் அது குறித்து தங்களின் முதலாளிகள் அல்லது பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.
உணவு விநியோகிப்பாளர்கள் அல்லது அத்தியாவசியப் பொருள் விநியோகிப்பாளர்கள் தவிர தங்கியிருக்கும் இடத்தில் மற்றவர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராாதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கடந்த வாரம் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மற்றோர் உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்திருந்தது. தீவிர சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவரால் ஐந்து நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குத் தவிர வேறு எதற்கும் வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது என்று அது உத்தரவு பிறப்பித்தது.