அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ஊழியரின் மனைவி, தமக்கு நிதியுதவி செய்த சிங்கப்பூர்வாழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
திரு சுப்பையா சிவசங்கர், 37, என்ற அந்த ஊழியர் கடந்த மாதம் 22ஆம் தேதி பணிக்குச் செல்லும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, திரு சிவசங்கரின் இரு பிள்ளைகளையும் தாயாரையும் அவருடைய மனைவி திருமதி சங்கீதாவே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரு சிவசங்கர், திரு சுப்பையா சண்முகநாதன், 32, திரு அழகு பெரியகருப்பன், 46, என கடந்த மாதம் சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய ஊழியர்கள் மூவரின் குடும்பங்களுக்காக நிதிதிரட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு லுவிஸ் இங், புலம்பெயர் ஊழியர்களுக்கு உதவி வரும் ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்னிங்கோட்ஸ்’ அமைப்பின் திருவாட்டி தீபா சுவாமிநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் அந்த நிதி திரட்டு முயற்சி இடம்பெற்றது.
இந்நிலையில், இந்த இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு நிதி உதவி செய்தும் மனரீதியாகவும் ஆதரவளித்தவர்களுக்கு திருமதி சங்கீதா கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள கடிதங்களை திரு இங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நானும் என்னுடைய இரு மகன்களும் (7 வயது, 3 வயது)என்ன செய்வதென்று தெரியாமல் மனமுடைந்த நிலையில் இருக்கிறோம். அவர் இல்லாத இந்த உலகில் எனக்கும் வாழப் பிடிக்கவில்லை.
“ஆனாலும் என் பிள்ளைகளுக்காகவும் மாமியாருக்காகவும் நான் வாழவேண்டும். மிகுந்த சிரமப்பட்டு, பலரது உதவியுடன் என் கணவரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வந்து சேர்ந்தது. அவரது உடலை நல்லடக்கம் செய்துவிட்டோம். எங்களது நிலையை உணர்ந்து சிங்கப்பூரில் உள்ள நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவி செய்துள்ளனர்.
“அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் செய்த உதவி என் இரு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவும். உங்களை நாங்கள் மறக்கமாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் போலவே, திரு சண்முகநாதனின் மனைவி திருமதி பானுப்பிரியாளும் தங்களுக்கு நன்கொடை அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்ற மாதம் மரணமடைந்த இந்திய ஊழியர்கள் மூவரின் குடும்பத்தாருக்கும் உதவுவதற்காக நன்கொடை வழங்குமாறு சிங்கப்பூரர்களை திரு இங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்கொடையாக $150,000 திரட்டவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இன்னும் $5,000 தேவைப்படுகிறது.
இம்மாதம் 3ஆம் தேதி வரை $54,000 திரட்டப்பட்ட நிலையில், அடுத்த நான்கு நாட்களில் சிங்கப்பூரர்கள் மேலும் $90,000 நன்கொடை வழங்கினர்.