இல்லப் பணிப்பெண்களின் சேவை இதற்கு மேலும் தேவையில்லாத முதலாளிகள் தங்களது பணிப்பெண்களை மற்ற வீடுகளுக்கு மாற்றிவிடும் நடைமுறை முதலாளிகளுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ள இவ்வேளையில் புதிய பணிப்பெண்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வர இயலாத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 20ஆம் தேதி (புதன்கிழமை) முதல் புதிய முதலாளிகள் கிடைக்காவிட்டாலும் பணிப்பெண்களின் வேலை அனுமதிச் சீட்டை முதலாளிகள் ரத்து செய்ய வெளிநாட்டுப் பணிப்பெண் நிறுவனங்களால் உதவ முடியும் என மனிதவள அமைச்சு இல்லப் பணிப்பெண்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்குத் தெரிவித்தது.
அத்தகைய பணிப்பெண்களை மற்றொரு வீட்டுக்கு மாற்றும் காலகட்டத்தில் அந்த நிறுவனங்கள் அவர்களை நிர்வகிக்கும்.
அத்தகைய பணிப்பெண்களுக்கு 14 நாட்களுக்கான சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அந்த காலகட்டத்துக்குள் புதிய முதலாளி கிடைக்காதபட்சத்தில் அந்த ஊழியர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்.
தற்போதைய நிலவரப்படி, புதிய முதலாளி வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே பணிப்பெண்ணை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளி அனுமதிக் கடிதத்தை வழங்க வேண்டும். அந்தப் பெண், பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தும் முகவைக்குத் திரும்பியபிறகும் அவர் புதிய முதலாளியிடம் வேலைக்குச் சேர்வதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்தப் பணிப்பெண்ணுக்காகும் செலவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை புதிய வேலை கிடைக்கவில்லை எனில் அந்தப் பணிப்பெண்ணை ஊருக்கு அனுப்ப விமானச் சீட்டையும் அந்த முதலாளியே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இல்லப் பணிப்பெண்களை புதிய வேலை கிடைக்கும் வரை நிர்வகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்பும் இல்லப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் நிறுவனங்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள்ளாக மனிதவள அமைச்சில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களின் பெயர்கள் அமைச்சின் இணையப்பக்கத்தில் பட்டியலிடப்படும்.
ஏற்கெனவே சிங்கப்பூரில் இருக்கும் பணிப்பெண்கள் வேறு முதலாளிகளிடம் சேர விரும்பினால் அத்தகையோரை அடையாளம் கண்டு முதலாளிகள் மாற்றத்தைச் செய்துகொடுக்குமாறு மனிதவள அமைச்சு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆனால், புதிய பொறுப்புகளை ஏற்க பதிவு செய்யும் முகவைகள் வேலைவாய்ப்பு முகவைகள் சட்டத்தின்கீழ் கூடுதல் உரிம நிபந்தனைகளுக்குட்பட வேண்டியதிருக்கும்.
ஏற்புடைய தங்கும் வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை, பொறுப்பேற்கும் முகவைகள் பணிப்பெண்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் $15,000க்கான மருத்துவ காப்புறுதியையும் அவர்களுக்காக அந்த முகவைகள் எடுக்க வேண்டும். அத்துடன், சிறப்பு அனுமதி காலத்துக்குள் அந்தப் பணிப்பெண்களுக்கு புதிய வேலை கிடைக்காதபட்சத்தில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதும் முகவைகளின் பொறுப்பாகும்.
இந்தப் புதிய பொறுப்புகளை ஏற்க முன்வரும் முகவர்கள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வேலைவாய்ப்பு முகவர்கள் (சிங்கப்பூர்) சங்கத்தின் தலைவர் திருவாட்டி கே. ஜெயபிரேமா குறிப்பிட்டார்.
மேலும், தற்போது நடப்பில் இருக்கும் விதிமுறைகளின்படி பணிப்பெண்களை புதிய முதலாளிகளுக்கு மாற்றிவிட முடியும் என்று குறிப்பிட்டார் திருவாட்டி ஜெயபிரேமா. புதிய முதலாளிகளுக்கு பணிப்பெண்களை மாற்றி விடுவதன் தொடர்பில் இணையப் பக்கம் ஒன்று, கடந்த மாதத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 20 முகவைகள் மற்றும் 1,000 முதலாளிகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online