அரசியல் பதவி வகிக்கும் இருவருக்கு இஸ்தானாவில் நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். போக்கு வரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான 49 வயது திரு பே யாம் கெங், கலாசார, சமூக இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு களின் நாடாளுமன்றச் செயலாளரான 41 வயது திரு எரிக் சுவா ஆகியோரே அவ்விருவர்.
பிரதமர் லீ சியன் லூங் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவித்த அமைச்சரவை மாற்றங்கள் பற்றிய அறிவிப்பில் திரு பே, திரு சுவா இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு பே, “புதிய போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங்கிடமிருந்தும் போக்குவரத்து அமைச்சில் பணியாற்றும் இதர அரசியல் பதவி வகிப்பவர்கள், உயர் அதிகாரிகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளவும் பணி புரியவும் ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார்.
போக்குவரத்து அமைச்சில் திரு பே, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, அதன் தொடர்பான விதிமுறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவது, முதலாவது மற்றும் கடைசி மைல் இணைப்பைப் பிரபலப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய உந்து நட மாட்டம் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி அணியில் இடம்பெற்றிருந்த திரு சுவா, இரு அமைச்சுகளில் தாம் ஏற்றிருக்கும் புதிய பொறுப்புகளில் ‘எஸ்ஜி செக்கியோர்’ திட்ட அலுவலகத்தின் முன்னாள் இயக்குராக இருந்த அனுபவத்தைக் கொண்டு செயலாற்ற விரும்புவதாகவும் கூறினார்.
தமது இரு அமைச்சுகளில் ஒன்றில் முன்பு பணியாற்றியுள்ள திரு பே இடமிருந்து ஆலோசனை பெறப் போவதாகவும் அவர் கூறினார்.