தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறும் வீரதீர சாகச நிகழ்வுகள் பலவும் இம்முறை ஒரே இடத்தில் நடைபெறாமல் தீவு முழுவதும் பரவலாக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கொவிட்-19 கொள்ளை நோய் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக இடைவெளியைப் பின்பற்றும் நோக்குடனும் கொள்ளைநோயைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வதற்கான போர்க்களத்தில் முன்னின்று பணியாற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்துப் போற்றுவதற்காகவும் தேசிய தின சாகச நிகழ்வுகள் மக்களை நாடி வந்தன,
‘ஒற்றுமையின் கர்ஜனை’ என்று பொருள்படும் போர் விமானங்களின் வான்வெளி சாகசமும் அவற்றுள் ஒன்று. காலை 10.45 மணிக்குத் தொடங்கி சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த அந்நிகழ்வில் ஆறு எஃப்-15 போர் விமானங்கள் பங்கேற்றன.
வழக்கமாக தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கமாக பாடாங் அல்லது மரினா பே மிதவை மேடை ஆகியவற்றின் மேலே பறந்து போர்த்திறன் சாகசங்களை நிகழ்த்தக்கூடிய இவ்விமானங்கள், இம்முறை குடியிருப்பு வட்டாரங்களின் மேலே பறந்தன. போர்க்கணை முனையை நினைவுபடுத்தும் வடிவத்தில் அந்த விமானங்கள் தீவு முழுவதும் பல பகுதிகளிடையே பறந்தபோது மக்கள் அவற்றைப் பார்த்து பரவசமடைந்ததோடு தேசிய கொடியை அசைத்து ஆதரவு தெரிவித்தனர்.
கொள்ளை நோய் முன்களப் பணியாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் ஆறு மருத்துவமனை களின் மீது அவை பறந்து சென்றன. வழக்கமாக தேசிய தின அணிவகுப்பின்போது சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் இப்போர் விமானங்கள் இம்முறை குடியிருப்பு வட்டாரங்களின் மேல் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாகப் பறந்தது சிறப்புக்குரிய அம்சங்களில் ஒன்று.
அதேபோல இரு சினூக் ஹெலிகாப்டர்கள், தீவின் இரு திசைகளிலிருந்து கிளம்பின. கிழக்கு திசையிலிருந்து ஒன்றும் மேற்குத் திசையிலிருந்து மற்றொன்றுமாகப் புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் தேசிய கொடியை 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டபடி சென்றதை ஏராளமான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி பார்த்தனர்.
முன்னதாக, காலையில் செஞ்சிங்கங்கள் எனும் ‘ரெட் லாயன்ஸ்’ வான்குடை சாகச வீரர்களும் இதேபோல இரண்டு இடங்களில் இருந்து புறப்பட்டு தீவு முழுவதும் சென்றனர். ஒவ்வோர் இடத்தில் இருந்தும் ஆறு வான்குடை வீரர்கள் புறப்பட்டனர்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை அருகிலுள்ள திறந்தவெளியில் ஒரு பிரிவினரும் செங்காங் பொது மருத்துவமனை அருகில் உள்ள புல்வெளித் திடலில் மற்றொரு பிரிவினரும் தரை இறங்கினர். சுமார் 1,500 மீட்டர் உயரத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக அவர்கள் இறங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
தரை இறங்கிய ஒவ்வொரு வீரரும் மருத்துவமனையை நோக்கி வீரவணக்கம் செலுத்தி அங்கு கொள்ளைநோயை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
“தேசிய தினத்தை முன்னிட்டு எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மரியாதை, தொடர்ந்து போராடும் வலிமையைத் தந்துள்ளது,” என்றார் செங்காங் பொது மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் அனிதா அண்ணாதுரை, 46.