பொருளியல் மந்தத்திற்கு இடையிலும் வளர்ச்சி காணுகின்ற துறைகளில் ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய $1 பில்லியன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார். இந்தத் திட்டம் முதிய ஊழியர்களுக்கு உதவுவதில் சிறப்பு கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்சருமான திரு ஹெங் தெரிவித்தார். அடுத்த ஆறு மாத காலத்தில் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் சம்பளச் செலவில் 25 விழுக்காடு வரை ஓராண்டு காலத்திற்கு மானியம் கிடைக்கும்.
வேலை வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் இந்த உதவி கிடைக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். 40 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள ஊழியர்களின் சம்பளச் செலவில் 50% வரை அரசு பணம் வழங்கும் என்று அமைச்சர் நிலை அறிக்கையில் அவர் தெரிவித்தார். பொருளியல் மந்தம் இருந்தாலும் உயிர்மருத்துவ அறிவியல், நிதிச் சேவை, தகவல்தொடர்பு தொழில் நுட்பத்துறை ஆகிய துறைகளுக்குத் தொடர்ந்து மேலும் ஊழியர்கள் தேவைப்படுவதை அவர் சுட்டினார்.
இதன் தொடர்பிலான மேல் விவரங்களை மனிதவள அமைச்சு இம்மாதப் பிற்பகுதியில் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீவக நகரங்களில் எஸ்ஜியுனைட்டெட் வேலை மற்றும் தேர்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது செயல்படும் 24 நிலையங்களுக்குச் சென்று தங்களுக்கு உகந்த வேலையைத் தேடிக்கொள்ளும்படி மக்களை திரு ஹெங் கேட்டுக்கொண்டார். வேலை தேடுவோருக்கு அந்த நிலையங்கள் வேலை, பயிற்சி வாய்ப்புகளை அல்லது பயிற்சியுடன் கூடிய வேலை அனுபவ வாய்ப்புகளை எடுத்துக் கூறும். பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு மக்கள் வருங்காலத்திற்கு ஆயத்தமாக முடியும்.