சிங்கப்பூரும் புருணையும் தங்களுக்கிடையிலான வலுவான இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்புக்குத் தங்கள் கடப்பாட்டை நேற்று மறுவுறுதிப்படுத்திக்கொண்டன.
சிங்கப்பூர்-புருணை தற்காப்பு கொள்கை கலந்துரையாடல் நேற்று மெய்நிகர் வழி நடைபெற்றது. அதற்கு சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு சான் ஹெங் கீயும் புருணை தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் ஷாரில் அன்வாரும் இணைத் தலைவர்களாகச் செயல்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வத்துக்குள்ளான அனைத்துலக மற்றும் வட்டார தற்காப்பு விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட இரு நாடுகளும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் போன்ற தற்காப்பு ஒத்துழைப்பு விவாதிப்புத் தளங்களை வரவேற்றன.
அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை புருணை ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு தற்காப்புக் கல்விமான்கள் வளர்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்ட மேம்பாட்டுக்கு திரு சானும் ஜெனரல் ஷாரிலும் தங்கள் ஒப்புதலை அளித்தனர்.
சிங்கப்பூரும் புருணையும் தங்களுக்கிடையிலான தற்காப்பு உறவின் 45ஆம் ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடுகின்றன.