சிங்கப்பூரில் உணவு நிலையங்கள் போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பதில் மனித இயந்திரங்கள் பணியில் ஈடுபடும் காலம் நெருங்கி வருகிறது.
தரைகளைச் சுத்தப்படுத்துவது, அலங்காரக் கூரைகளைப் பரிசோதனை செய்வது, மின்தூக்கி சட்டங்களில் மருந்தடித்துச் சுத்தப்படுத்துவது, ஓர் இடத்தில் கொசுக்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவது போன்ற வேலைகளைச் செய்யக்கூடிய மனித இயந்திரங்கள், இப்போது தெம்பனிஸ் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் இவை இதர உணவு நிலையங்களில் பணியில் இறங்கும் என்று தெரிகிறது.
இத்தகைய இயந்திரங்கள் துப்புரவு ஊழியர்களை விடுவிக்கும் என்பதால் அவர்கள் மனித இயந்திரங்களை இயக்குவது போன்ற தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு மேலும் மதிப்பு கூடிய வேலைகளில் ஈடுபடலாம் என்று தெம்பனிஸ் நகர மன்றம் தெரிவித்து இருக்கிறது.
தெம்பனிஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், நகர மன்றத் தலைவர் செங் லி ஹுய் ஆகியோர் தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் இருக்கும் அந்த உணவு நிலையத்துக்குச் சென்று மனித இயந்திரங்கள் துப்புரவு வேலைகள் செய்வதைப் பார்வையிட்டனர்.