தந்தை தன் கணவரைக் கொன்றுவிட்டதாக அறிந்த தருணத்தை மறக்கவே முடியாது என்றார் திருவாட்டி ஷைலர் டான், 46. 2017ல் ஜூலை 10ஆம் தேதியன்று பட்டப்பகலில் தெலுக் ஆயர் ஸ்திரீட் பகுதியில் 39 வயது ஸ்பென்சர் துப்பானியை டான் நாம் செங் கத்தியால் குத்தினார்.
குத்திய சில நிமிடங்களில் டான் தன் மகளுடன் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியபோது திருவாட்டி ஷைலர் கதிகலங்கிப் போனார். அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்தை அவர் அடைந்தபோது கைது செய்யப்படுவதற்காக டான் காத்திருந்த காட்சியைக் கண்டார்.
இருப்பினும் டானுக்கு நேற்று எட்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தமக்கு ஆறுதலை அளிப்பதாக மகள் தெரிவித்தார்.
இறந்த திரு துப்பானியைக் குடும்பத்தில் ஒருவராகக் கருதிய டானுக்கு வேறொரு பெண்ணுடன் தன் மருமகன் தொடர்பு வைத்திருப்பதும் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்தபோது பெரும் அழுத்தத்திற்கு ஆளானதாக திருவாட்டி ஷைலர் பகிர்ந்துகொண்டார்.
திருவாட்டி ஷைலருக்கும் திரு துப்பானிக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளின் வயது 13, 11 மற்றும் 9. தாத்தாவைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பதாகச் சொன்ன திருவாட்டி ஷைலர், டானின் விடுதலைக்காக அனைவரும் இப்போதே திட்டமிடுவதாகக் கூறினார்.