அமைதியையும் ஒற்றுமையையும் காக்கும் ஒரு சக்தியாக சமயம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய புதிய நூலை அனைத்துச் சமயச் சங்கம் (ஐஆர்ஓ) நேற்று வெளியிட்டது. ‘ரிலிஜன்ஸ் ஃபார் பீஸ் அண்ட் ஹார்மனி’ என்ற தலைப்பிலான இந்த நூலில் பத்து கட்டுரைகள் உள்ளன.
சமயம் என்ற பேரில் உலகில் சண்டை, வன்முறை ஆகியவற்றைத் தூண்டிவிடுவதற்கு எதிராக இந்த நூல் குரல்கொடுத்துள்ளது.
அமைதி காக்கும் உலகச் சமயங்களின் கொள்கைகளை எடுத்துக்கூறும் அதே சமயத்தில் நூலை அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் திரு டான் தியாம் லாய் கூறினார். உலகில் வெறுப்புணர்வும் தீவிரவாதமும் அதிகரித்துள்ள நிலையில் சமூக ஒற்றுமைக்குச் சமய நம்பிக்கை அடிப்படையான அணுகுமுறை தேவை என்பதால் இந்நூல் வெளியிடப்பட்டதாக திரு டான் கூறினார்.
அமைதிக்கான அனைத்துலக தினம் இம்மாதம் 21ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மெய்நிகர் நிகழ்வில் இந் நூல் வெளியிடப்பட்டது.
கனடா, ஃபின்லாந்து, இந்தோனீசியா, இஸ்ரேல், அமெரிக்கா, அல்பேனியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த 120 பிரதிநிதிகளின் முன்னிலையில் மெய்நிகர் நூல் வெளியீடு அரங்கேறியது.
சங்கத்தின் புரவலரான ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.